மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை கைவிடக்கோரி சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை கைவிடக்கோரி சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Aug 2019 10:45 PM GMT (Updated: 24 Aug 2019 7:32 PM GMT)

கரூரில், மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை கைவிடக்கோரி சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்,

கரூர் தாலுகா அலுவலகம் முன்பு மாவட்ட சி.ஐ.டி.யு.வின் அரசு போக்குவரத்து கழக சம்மேளனம், ஆட்டோ, டாக்சி, டெம்போ மற்றும் வேன் ஓட்டுனர்கள் சங்கம், மாவட்ட சாலை போக்குவரத்து தொழிற் சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் ரங்கராஜ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட நிர்வாகி தண்டபாணி மற்றும் செல்வராஜ், முத்துசாமி, சோமசுந்தரம் உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். அனைத்து வாகன ஓட்டுனர்கள் மற்றும் இருசக்கர, கனரக வாகன பழுதுபார்ப் போர், உதிரி பாகங்கள் விற்பனை செய்வோரின் வாழ்வாதாரத்தை பறிக்கின்ற மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை முற்றிலும் கைவிட வேண்டும்.

பெட்ரோல்-டீசலை ஜி.எஸ்.டி.க்குள்...

அநியாய வாகன இன்சூரன்ஸ் கட்டண உயர்வினை ரத்து செய்திட வேண்டும். பெட்ரோல், டீசல், கியாஸ் ஆகியவற்றை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு புதுச்சேரி மாநிலம்போன்று பண்டிகை காலத்தில் போனஸ் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்பு மாவட்ட சி.ஐ.டி.யு.வின் அரசு போக்குவரத்து கழக சம்மேளனம், ஆட்டோ, டாக்சி, டெம்போ மற்றும் வேன் ஓட்டுனர்கள் சங்கம், மாவட்ட சாலை போக்குவரத்து தொழிற் சங்க கூட்டமைப்பு சார்பிலும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story