திருப்போரூர் அருகே பரபரப்பு: கோவில் கோபுரத்தில் இருந்த மர்மபொருள் வெடித்து வாலிபர் சாவு - 5 பேர் படுகாயம்


திருப்போரூர் அருகே பரபரப்பு: கோவில் கோபுரத்தில் இருந்த மர்மபொருள் வெடித்து வாலிபர் சாவு - 5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 25 Aug 2019 9:45 PM GMT (Updated: 25 Aug 2019 8:18 PM GMT)

திருப்போரூர் அருகே, பழமையான கங்கையம்மன் கோவில் கோபுரத்தில் இருந்த மர்ம பொருள் வெடித்து சிதறியதில் வாலிபர் பலியானார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருப்போரூர், 

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த மானாமதியில் பழமையான கங்கையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் மற்றும் குளக்கரையை சுத்தப்படுத்தும் பணியில் அந்த பகுதி பொதுமக்கள் நேற்று ஈடுபட்டனர்.

குளக்கரையை சுத்தப்படுத்திய பிறகு சிலர், கோவில் கோபுரத்தின் மீது ஏறி சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவில் கோபுரத்தில் மர்மபொருள் ஒன்று இருந்தது. அதை எடுத்த அவர்கள், கோபுரத்தில் இருந்து கீழே தூக்கி வீசினர். அப்போது அந்த மர்மபொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதனால் கோவிலை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு இருந்த பொதுமக்கள், அலறி அடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். எனினும் மர்மபொருள் வெடித்து சிதறியதில் அருகில் நின்று கொண்டிருந்த மானாமதியை சேர்ந்த ஜெயராம் (வயது 28), திலீபன் (25), யுவராஜ் (25), திருமால் (22), விசுவநாதன் மற்றும் சூர்யா (22), ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

உயிருக்கு போராடிய அவர் களை மீட்டு உடனடியாக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சூர்யா பரிதாபமாக இறந்தார். மற்ற 5 பேரும் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பலியான சூர்யா கூவத்தூரை அடுத்த குண்டு மணிசேரியை சேர்ந்தவர். தனது மாமா வீட்டுக்கு வந்திருந்த போது பலியாகி விட்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் சம்பவ இடத் துக்கு விரைந்து சென்று, மர்ம பொருள் வெடித்து சிதறிய இடத்தை பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டார்.

சம்பவ இடத்துக்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் கோவில் முழுவதும் சோதனை மேற்கொண்டனர். இதுபற்றி மானாமதி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவில் கோபுரத்தில் மர்ம பொருளை வைத்தது யார்?, கோவிலை வெடி வைத்து தகர்க்க சதி திட்டமா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

படுகாயம் அடைந்தவர் களின் வீடு, சூர்யாவின் மாமா வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

விநாயகர் சதுர்த்தி மற்றும் வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோவில்கள், தேவாலயங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்த சூழ்நிலையில் திருப்போரூர் அருகே பழமையான கோவில் கோபுரத்தில் இருந்த மர்ம பொருள் வெடித்து சிதறியதில் வாலி பர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story