சிவகங்கையில் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம்: அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்


சிவகங்கையில் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம்: அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 26 Aug 2019 11:00 PM GMT (Updated: 26 Aug 2019 5:21 PM GMT)

சிவகங்கையில் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாமை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்

சிவகங்கை,

முதல்-அமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம் நிகழ்ச்சி தொடக்க விழா சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடந்தது. நாகராஜன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் லதா வரவேற்றார். முகாமை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்து பேசியதாவது:- தமிழக முதல்-அமைச்சர் ஏற்கனவே குடிமராமத்துப் பணி திட்டத்தை தொடங்கி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

இந்த திட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து கண்மாய், குளங்கள், ஊருணிகள்தூர்வாரி சீரமைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் பெரியாறு தண்ணீர் வந்தால் எந்த பாதிப்பும் இல்லாமல் செல்லும் வகையில் அனைத்து கால்வாய்களும் தூர் வராப்பட்டுள்ளன.

தற்போது பொதுமக்களின் குறைகளை தீர்க்க வேண்டும் என்பதற்காக குறைதீர்க்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். மேலும் கிராமப்பகுதிகளில் ஒருவர் கூட விடுபடாத அளவிற்கு அரசின் நலத்திட்டங்களைப் பெற்று பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

இங்கு பெறப்படும் மனுக்கள் மீது ஒரு மாத காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சிவகங்கை நகராட்சியில் இன்றும் (செவ்வாய்க்கிழமை) மனுக்களை கொடுக்கலாம். அதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சிறப்பு முகாம்களை பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்தி தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து 10 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையினையும் அமைச்சர் வழங்கினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் அருள்மணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமாரி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ராஜா, சுகாதாரத்துறை துணை இயக்குனர் யசோதாமணி, தாசில்தார் கண்ணன், கூட்டுறவு வங்கி தலைவர் ஆனந்தன், நகராட்சி ஆணையாளர் அப்துல்கபூர், கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் கருணாகரன், சசிக்குமார், பாண்டி, பலராமன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story