வேதாரண்யத்தில், இருதரப்பினரிடையே மோதல்: 2-வது நாளாக கடைகள் அடைப்பு; 28 பேர் கைது


வேதாரண்யத்தில், இருதரப்பினரிடையே மோதல்: 2-வது நாளாக கடைகள் அடைப்பு; 28 பேர் கைது
x
தினத்தந்தி 26 Aug 2019 11:15 PM GMT (Updated: 26 Aug 2019 6:45 PM GMT)

வேதாரண்யத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டனர். 2-வது நாளாக நேற்றும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் தலைமையில் 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ராஜாளிக்காட்டில் இருந்து ஜீப்பில் ஒருவர் நேற்று முன்தினம் மாலை வேதாரண்யத்துக்கு வந்தார். வேதாரண்யம் போலீஸ் நிலையம் எதிரே வந்தபோது ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன்(வயது 24) என்பவர் மீது ஜீப் எதிர்பாராதவிதமாக மோதியதாக கூறப்படுகிறது. இதில் காயத்துடன் கிடந்த அவர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து காரணமாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் போலீஸ் நிலையம் எதிரே நின்று கொண்டிருந்த அந்த ஜீப்புக்கு திடீரென தீ வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வலுத்து, வன்முறையாக மாறியது.

அம்பேத்கர் சிலை சேதம்; கடைகள் அடைப்பு

இந்த மோதலின்போது அதே பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டது, ஜீப்புக்கு தீ வைப்பு, போலீஸ் நிலையம் மீதும், போலீசார் மீதும் கல்வீச்சு என அடுத்தடுத்து நடந்த வன்முறை சம்பவங்களால் வேதாரண்யம் போலீஸ் நிலையம் அமைந்துள்ள பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

அதே நேரத்தில் வேதாரண்யம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஜன்னல் கண்ணாடியும் உடைக்கப்பட்டது. வன்முறையை தொடர்ந்து பாதுகாப்பு காரணங் களுக்காக பஸ் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப் பட்டது. வேதாரண்யம் நகர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன.

இதனிடையே வேதாரண்யம் பகுதிக்கு வந்த அகஸ்தியன்பள்ளி கூத்ததேவன்காடு பாபுராஜன்(30), ராஜாளிக்காட்டை சேர்ந்த சரத்குமார் (27) ஆகிய இருவரும் மர்ம கும்பலால் தாக்கப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

பஸ் போக்குவரத்து நிறுத்தம்

வன்முறை காரணமாக வேதாரண்யத்தில் இருந்து நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர், தஞ்சாவூர் உள்பட பல்வேறு இடங்களுக்கு பஸ் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்த மோதல் சம்பவத்தின்போது வேதாரண்யத்தில் உள்ள ஒரு சில கடைகள் சூறையாடப்பட்டன. கடற்கரை செல்லும் சாலையில் உள்ள கோழிப்பண்ணை தீ வைத்து எரிக்கப்பட்டது.

இரு தரப்பு மோதலால் பதற்றம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து திருச்சி சரக ஐ.ஜி வரதராஜலு, தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன், போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜசேகரன்(நாகை), துரை(திருவாரூர்), துணை போலீஸ் சூப்பிரண்டுகள் திருமேனி, முருகவேல், இன்ஸ்பெக்டர் சுபாஷ்சந்திரபோஸ் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். இதுதவிர அதிவிரைவு படை போலீசாரும் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.

புதிய சிலை நிறுவப்பட்டது

இந்த நிலையில் சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக வெளியூரில் இருந்து கொண்டு வரப்பட்ட அம்பேத்கர் சிலை நேற்று அதிகாலை கிரேன் மூலம் தூக்கி வைத்து நிறுவப்பட்டது. உடனடியாக அந்த சிலைக்கு வர்ணம் பூசப்பட்டது.

புதிதாக நிறுவப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு செல்வராஜ் எம்.பி., முன்னாள் எம்.பி. பி.வி.ராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநிலச் செயலாளர் சிந்தனைச் செல்வன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச்செயலாளர் சாமுவேல், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நாகை மாலி, மாரிமுத்து, தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநில துணை பொது செயலாளர் இமான் சேகர், மக்கள் மறுமலர்ச்சி கழக நிறுவனர் வக்கீல் பொன்.முருகேசன் உள்ளிட்டோர் தங்கள் ஆதரவாளர்களுடன் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

28 பேர் கைது

நேற்று காலை 8 மணிக்கு பிறகே வேதாரண்யத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை ஒரு சில கடைகள் மட்டுமே திறந்து இருந்தது. அங்கு ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க தஞ்சை சரக டி.ஐ.ஜி லோகநாதன் தலைமையில் 750 போலீசார் 2-வது நாளாக நேற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

புதிய சிலை வைக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று அங்கு இயல்பு நிலை திரும்பியது. இந்த மோதல் சம்பவம் தொடர்பாக இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகை எம்.பி. செல்வராஜ் கூறும்போது, உப்பு போராட்டம் கண்ட புண்ணிய பூமியில் இப்படிபட்ட விரும்பத்தகாத சம்பவம் நடப்பது வேதனைக்குரியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாரபட்சம் பார்க்காமல் போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து நாகை மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

Next Story