தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலைமறியல் போராட்டம் கால்வாய்களை தூர்வார வலியுறுத்தல்


தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலைமறியல் போராட்டம் கால்வாய்களை தூர்வார வலியுறுத்தல்
x
தினத்தந்தி 26 Aug 2019 11:00 PM GMT (Updated: 26 Aug 2019 9:07 PM GMT)

கால்வாய்களை தூர்வாரக்கோரி ஈத்தாமொழி புதூர் சந்திப்பில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

ஈத்தாமொழி,

கன்னியாகுமரி தொகுதியில் அத்திக்கடை, சம்பகுளம் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கடைவரம்பு வரை வந்து சேர்வதில்லை. இதனால், அப்பகுதியில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் செல்லவில்லை. இதனால், நிலத்தடி நீர்மட்டமும் குறைந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.

கால்வாய்கள் தூர்வாரப்படாததை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி சார்பில் மேலகிருஷ்ணன்புதூர்- ஈத்தாமொழி சாலையில் புதூர் சந்திப்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு ஆஸ்டின் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ராஜாக்கமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் லிவின்ஸ்டன், அகஸ்தீஸ்வரம் வட்டார ஒன்றிய செயலாளர் மதியழகன், ராஜாக்கமங்கலம் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் அசோகராஜ், மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர் சரவணன், ஊராட்சி செயலாளர் பகருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தி.மு.க.வை சேர்ந்த நிர்வாகிகள் தங்கம், ராஜேந்திரன், கிருஷ்ணராஜ், ரத்தினசாமி, பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது, கால்வாய்களை தூர்வாரக்கோரியும், குளங்களில் தண்ணீர் நிரப்பக்கோரியும் சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினார்கள்.

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்த ராஜாக்கமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா, ஈத்தாமொழி சப்-இன்ஸ்பெக்டர் அஜ்மல் ஜெனிப் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் விரைந்து வந்தனர். மேலும் பொதுப்பணித்துறை (பாசன) உதவி செயற்பொறியாளர் ரமேஷ்ராஜன் மறியலில் ஈடுபட்ட ஆஸ்டின் எம்.எல்.ஏ.விடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, கால்வாயில் தூர்வாரும் பணியை 15 நாட்களுக்குள் முடித்து கடைவரம்பு வரை தங்குதடையின்றி தண்ணீர் வரவும், குளங்களில் நீர் நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார். அதைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Next Story