துப்பாக்கியால் சுட்டு தி.மு.க. நிர்வாகி தற்கொலை ஏன்? பரபரப்பு தகவல்கள்


துப்பாக்கியால் சுட்டு தி.மு.க. நிர்வாகி தற்கொலை ஏன்? பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 29 Aug 2019 10:45 PM GMT (Updated: 29 Aug 2019 8:38 PM GMT)

பரமத்தி வேலூர் அருகே, தி.மு.க. நிர்வாகி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

பரமத்தி வேலூர், 

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள செங்கப்பள்ளியை சேர்ந்தவர் டாக்டர் ஆனந்த் (வயது 50). நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. மருத்துவ அணி அமைப்பாளரான இவர், ப.சிதம்பரத்தின் மனைவி நளினியின் உறவினர் ஆவார். பரமத்தி வேலூர் பேட்டையில் ஆஸ்பத்திரி நடத்தி வந்த ஆனந்த், ஆஸ்பத்திரியின் மாடியில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி தமிழ்செல்வி (45), தனியார் கல்லூரி விரிவுரையாளர். மகள் அபர்ணா (17).

இந்த நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் ஆஸ்பத்திரிக்கு வந்த டாக்டர் ஆனந்த், மதியம் வீட்டுக்கு சென்றார். சிறிது நேரத்தில் ஆஸ்பத்திரி பணியாளர்களை அழைத்து அனைவருக்கும் சம்பளத்துடன் கூடுதலாக ரூ.1000 கொடுத்து விட்டு, பின்னர் காரில் பரமத்தி வேலூர் அருகே பாலப்பட்டி பக்கத்தில் செங்கப்பள்ளியில் உள்ள அவரது தோட்டத்திற்கு சென்றார். அங்கு ஆனந்த், நாட்டுத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அவரது உறவினர் கொடுத்த தகவலின் பேரில், நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று ஆனந்தின் பிணத்தை பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். அங்கு கிடந்த நாட்டுத்துப்பாக்கியை கைப்பற்றினர். இந்த சம்பவம் குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, டாக்டர் ஆனந்த் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் கிடைத்த பரபரப்பு தகவல்கள் விவரம் வருமாறு:-

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது தோட்டத்திற்கு சென்ற ஆனந்த், கோவையில் இருந்த தனது மனைவி தமிழ்செல்விக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது தனக்கு வாழ பிடிக்கவில்லை என்றும், அதனால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்து உள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தமிழ்செல்வி, தற்கொலை செய்து கொள்ள வேண்டாம். நான் வீட்டிற்கு வந்ததும் பேசிக்கொள்ளலாம் என சமாதானம் செய்து உள்ளார்.

பின்னர் தமிழ்செல்வி செங்கப்பள்ளியில் உள்ள தனது உறவினரான பிரவீன்ராஜாவிற்கு (26) போன் செய்து, உடனடியாக தோட்டத்திற்கு சென்று தனது கணவர் ஆனந்தை பார்த்துக்கொள்ளுமாறு கூறியுள்ளார். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற பிரவீன்ராஜா, ஆனந்திடம் வீட்டிற்கு செல்லலாம் என அழைத்து உள்ளார். அப்போது வீட்டிற்கு செல்ல தனது காரை எடுத்து வருமாறு பிரவீன்ராஜாவிடம் அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து பிரவீன்ராஜா காரை எடுத்து வருவதற்குள் ஆனந்த், தான் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் தனது தாடையில் வைத்து சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரவீன்ராஜா அங்கு சென்று பார்த்தபோது ஆனந்த் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடனடியாக பிரவீன்ராஜா பரமத்தி வேலூர் போலீசாருக்கும், அவர்களது உறவினர்கள் மற்றும் ஆனந்தின் மனைவி தமிழ்செல்விக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

மேற்கண்ட பரபரப்பு தகவல்கள் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், கோவையில் இருந்து திரும்பி வந்த டாக்டர் ஆனந்தின் மனைவி தமிழ்செல்வி, கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி, அவரிடம் தீவிர விசாரணை நடத்தினார். அப்போது அவர், எங்கள் இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கமானது தான். எனது கணவர் குடும்ப தகராறு ஏற்படும் சமயங்களில் என்னிடம் பேசாவிட்டாலும், நான் அவரிடம் பேசி சமாதானம் செய்வேன்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது கணவர் நண்பர்களுடன் பொள்ளாச்சி அருகே சேத்துமடை கிராமத்திற்கு சுற்றுலா சென்று விட்டு வந்தபோது மீண்டும் எங்களுக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டதால் கடந்த சில நாட்களாக இருவரும் பேசிக்கொள்வது இல்லை. இதனால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என தமிழ்செல்வி கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

டாக்டர் ஆனந்துக்கு கோடிக்கணக்கான ரூபாய்க்கு சொத்துக்கள் உள்ளன. மேலும் பெட்ரோல் பங்க் நடத்தி வந்தார். அவருக்கு விவசாய நிலங்களும் ஏராளமாக உள்ளன.

குடும்ப பிரச்சினை காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் அவரது தற்கொலைக்கு வேறு காரணம் ஏதும் உள்ளதா? என்றும் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story