செய்யூர் அருகே கார் மோதி தந்தை, மகள் பலி


செய்யூர் அருகே கார் மோதி தந்தை, மகள் பலி
x
தினத்தந்தி 8 Sep 2019 11:00 PM GMT (Updated: 8 Sep 2019 7:22 PM GMT)

செய்யூர் அருகே கார் மோதி தந்தை, மகள் பலியானார்கள்.

மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூரை அடுத்த கடப்பாக்கம் அருகே உள்ள நல்லூரை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 50), தையல் தொழிலாளி. இவரது மகள் ஐஸ்வர்யா (22). என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர்கள் இருவரும் நேற்று காலை உறவினர் ஒருவரது திருமணத்திற்கு செல்வதற்காக சைக்கிளில் சென்றனர். சைக்கிள் டயரில் காற்று குறைவாக இருந்ததால் ரங்கநாதன் சைக்கிளை தள்ளி கொண்டு சாலை ஓரமாக செல்ல அவரது மகள் சைக்கிளின் பின்னால் நடந்து சென்றார்.

நல்லூர் பகுதியில் செல்லும்போது அந்த வழியாக வந்த கார் எதிரே வந்த லாரியில் மோதாமல் இருப்பதற்காக திரும்பவே கார் இவர்கள் இருவர் மீதும் மோதியது.

இதில் அவர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர். அங்கு இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கடப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர்.

மேலும் அவர்களை மேல் சிகிச்சைக்காக மரக்காணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவ்வாறு செல்லும் வழியில் அவர்கள் இருவரும் பரிதாபமாக இறந்தனர். தகவல் அறிந்த சூனாம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தரனேஸ்வரி அவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

காரை ஓட்டி வந்த சென்னையை சேர்ந்த வெங்கட சுப்பிரமணியை போலீசார் கைது செய்தனர். இவர் திருக்கடையூரில் வயலின் கச்சேரிக்காக தனது மகனுடன் காரில் சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story