பிறந்த நாளையொட்டி பெரியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை


பிறந்த நாளையொட்டி பெரியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 17 Sep 2019 10:45 PM GMT (Updated: 17 Sep 2019 7:59 PM GMT)

பெரியாரின் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நாகர்கோவில்,

பெரியார் பிறந்தநாள் விழா நேற்று குமரி மாவட்டத்தில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாகர்கோவில் ஒழுகினசேரி சந்திப்பு பகுதியில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

அ.தி.மு.க.

குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமை தாங்கி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஏ.அசோகன் (கிழக்கு), ஜாண்தங்கம் (மேற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், மாநகர செயலாளர் சந்துரு, ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், அணிகளின் செயலாளர்கள் ஜெயசீலன், சுகுமாரன், நிர்வாகிகள் சந்திரன், ஜெயகோபால், லதா ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தி.மு.க.- திராவிட கழகம்

தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சந்திரசேகர், பெஞ்சமின், அசோகன், குமார், மகேஷ், பாலசுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திராவிட கழகம் சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதற்கு மாவட்ட தலைவர் மணி தலைமை தாங்கினார். நெல்லை மண்டல செயலாளர் வெற்றிவேந்தன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் கிருஷ்ணேஷ்வரி, பொதுக்குழு உறுப்பினர் தயாளன், துணைத்தலைவர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்திய கம்யூனிஸ்டு

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பாராளுமன்ற தொகுதி செயலாளர் பகலவன் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் தொகுதி செயலாளர் தாஸ், ஒன்றிய செயலாளர் ஜாண், இளைஞர் எழுச்சி பாசறை நிர்வாகி பேரறிவாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story