மேட்டூர் அணை நீர்மட்டம் 119.94 அடியாக குறைந்தது


மேட்டூர் அணை நீர்மட்டம் 119.94 அடியாக குறைந்தது
x
தினத்தந்தி 22 Sep 2019 11:00 PM GMT (Updated: 22 Sep 2019 7:11 PM GMT)

மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 15 நாட்களுக்கு பிறகு 120 அடியில் இருந்து 119.94 அடியாக குறைந்தது.

மேட்டூர்,

கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதையடுத்து அந்த இரு அணைகளில் இருந்தும் உபரிநீர் திறந்து விடப்பட்டது.

இந்த நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து கடந்த 7-ந் தேதி தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்தும் காவிரி ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டது.

பின்னர் பருவமழை குறைந்து, கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. அதே நேரத்தில் அணைக்கு நீர்வரத்தை பொறுத்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக கடந்த 15 நாட்களாக அணை நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நிலை நிறுத்தப்பட்டு வந்தது.

நீர்மட்டம் குறைந்தது

இந்த நிலையில், அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 7 ஆயிரத்து 812 கனஅடியாக குறைந்தது. அதாவது அணையில் இருந்து காவிரி டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீர் அளவான வினாடிக்கு 8 ஆயிரத்து 600 கனஅடியை விட அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

இதன்காரணமாக அணை நீர்மட்டம் கடந்த 15 நாட்களுக்கு பிறகு 119.94 அடியாக நேற்று குறைந்தது. அணைக்கு நீர்வரத்தை விட தண்ணீர் திறக்கும் அளவு அதிகமாக உள்ளதால் அணை நீர்மட்டம் குறைய தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story