அரசு துறைகளில் வேலைவாய்ப்புக்கான எழுத்து, நேர்முக தேர்வு நடத்திய பின்பு ரத்து செய்யப்படும் நிலை; வேலை தேடுவோருக்கு பெரும் பாதிப்பு


அரசு துறைகளில் வேலைவாய்ப்புக்கான எழுத்து, நேர்முக தேர்வு நடத்திய பின்பு ரத்து செய்யப்படும் நிலை; வேலை தேடுவோருக்கு பெரும் பாதிப்பு
x
தினத்தந்தி 24 Sep 2019 11:15 PM GMT (Updated: 24 Sep 2019 8:04 PM GMT)

அரசு துறைகளில் காலிப்பணியிடங்களுக்கான எழுத்து மற்றும் நேர்முக தேர்வுகள் நடத்திய பின்பு அத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதால் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

விருதுநகர்,

கடந்த காலங்களில் அரசு துறைகளில் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பணியிடங்களை தவிர பிற பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் பதிவு மூப்பு அடிப்படையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். தற்போது அந்த நடைமுறை முற்றிலுமாக மாற்றப்பட்டு விட்டது.

பல்வேறு அரசு துறைகள் காலிப்பணியிடங்களுக்கு நேரடியாகவே விண்ணப்பங்கள் பெற்று எழுத்து, நேர்முக தேர்வுகளை நடத்தும் நிலை உள்ளது. இதற்கு முறையாக அறிவிப்பு வெளியிடப்பட்டு குறிப்பிட தேதிகளில் எழுத்து, நேர்முக தேர்வுகள் நடத்தப்படுகிறது. எழுத்து தேர்வு முடிந்த பின்பு சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் நேர்முகத்தேர்வு நடத்தப்படுகிறது. எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்கின்றனர். சில நேரங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்று விடுகிறது.

ஆனால் பல துறைகளில் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் நடந்து முடிந்த பின்பு எழுத்து மற்றும் நேர்முக தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. இதற்கான காரணங்கள் அறிவிக்கப்படுவதில்லை. முறையாக முடிவு செய்த பின்பு தான் எழுத்து, நேர்முக தேர்வுகள் நடத்துவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. இதற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து விண்ணப்பிக்கின்றனர். 100 காலிப்பணியிடங்களுக்கே ஆயிரக்கணக்கான பேர் விண்ணப்பித்து தேர்வும் எழுதுகின்றனர்.

ஆனால் திடீரென இந்த தேர்வுகள் ரத்து செய்யப்படும் நிலை அதிகரித்து வருகிறது. கால்நடைத்துறை தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்களுக்கான எழுத்து மற்றும் நேர்முக தேர்வுகள் நடத்தப்பட்டு அத்தேர்வுகள் திடீரென ரத்து செய்யப்பட்டு விட்டது. கூட்டுறவுத்துறையில் எழுத்து மற்றும் நேர்முக தேர்வு நடந்து பல மாதங்களுக்கு பின்பு நீதிமன்ற உத்தரவுக்கு பின்பு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் லட்சக்கணக்கான பேர் பதிவு செய்துள்ள நிலையில் அரசு துறைகளில் நேரடியாக காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்படுவதால் வேலை தேடும் இளைஞர்களும், பெண்களும் இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கின்றனர். தேர்வுக்காக சிரமப்பட்டு தங்களை தயார் செய்து கொண்டு பல்வேறு தொலைதூர மையங்களுக்கு சென்று தேர்வில் கலந்து கொள்கின்றனர்.

ஆனால் தங்களுக்கு வேலை கிடைக்கும் என்று காத்திருக்கும் நிலையில் திடீரென தேர்வு ரத்து செய்யப்படுவதால் அவர்களுக்கு மன ரீதியாகவும் பொருளாதர ரீதியாகவும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. அரசு துறைகள் எழுத்து மற்றும் நேர்முக தேர்வுகளை ரத்து செய்த பின்பு நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிப்பதுடன், தேர்வு நடத்தும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அவர்கள் பிற வேலைகளுக்கு விண்ணப்பிக்காமல் இந்த தேர்வுக்காக காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.

காலிப்பணியிடங்களுக்கு முறையாக தேர்வு அறிவித்த பின்பு தேர்வு நடத்துவதை உறுதி செய்து அதில் வெற்றி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டியது அவசியம் ஆகும். வேலை கிடைத்துவிடும் என நம்பிக்கையில் இருக்கும்போது, தேர்வுகளை ரத்து செய்வது என்பது வேலை தேடுவோருக்கு அரசு துறைகளில் நம்பிக்கை இழப்பை ஏற்படுத்தி விடும்.

எனவே இனி வரும் காலங்களிலாவது அரசு துறைகளில் காலிப்பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தும்போது அத்தேர்வுகளில் வெற்றி பெறுவோருக்கு வேலை கிடைக்கும் என்ற உறுதியை அரசு ஏற்படுத்த வேண்டும்.

Next Story