நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் அமைச்சர் காமராஜ் பேட்டி


நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் அமைச்சர் காமராஜ் பேட்டி
x
தினத்தந்தி 29 Sep 2019 11:00 PM GMT (Updated: 29 Sep 2019 6:45 PM GMT)

நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் என அமைச்சர் காமராஜ் கூறினார்.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அமைச்சர் காமராஜ் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் வலங்கைமான் கிழக்கு ஒன்றியம் பாடாச்சேரி அ.ம.மு.க. கிளை அவைத் தலைவர் சாமிநாதன் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் அ.தி.மு.க.வில் இணைந்தனர். பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு நோய் அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு நோய் கண்டறியப் படவில்லை. சுகாதாரத்துறை சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ பரி சோதனைகள் நடைபெற்று வருகின்றது.

அழுத்தம் கொடுக்கும்

ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி போராட்டங்களை அறிவிப்பதும், பின்னர் அதனை கைவிட்டு விட்டோம் என கூறிவருபவர் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். தமிழக அரசை பொறுத்தவரை தமிழக பாடத்திட்டத்திலும், தமிழக மாணவர்களின் நலனிலும் தெளிவாக இருக்கிறது. மத்திய அரசின் உயர்கல்வித்துறை நடத்திய நீட் தேர்வில் முறைகேடு நடந்திருப்பது விரும்பத்தகாத ஒன்று. யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்கும். தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு தேவை இல்லை என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. அதுவே தங்களின் நிலைபாடு.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story