உடுமலை அருகே பி.ஏ.பி.கால்வாயின் குறுக்கே 2 இடங்களில் பாலம் கட்டுவதற்கான முதல் கட்டபணிகள் நிறைவு; தண்ணீர் திறந்து விட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி


உடுமலை அருகே பி.ஏ.பி.கால்வாயின் குறுக்கே 2 இடங்களில் பாலம் கட்டுவதற்கான முதல் கட்டபணிகள் நிறைவு; தண்ணீர் திறந்து விட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 29 Sep 2019 10:45 PM GMT (Updated: 29 Sep 2019 7:24 PM GMT)

உடுமலை அருகே பெரியகோட்டைஊராட்சி பகுதியில் பி.ஏ.பி.கால்வாயின் குறுக்கே 2 இடங்களில் பாலம் கட்டுவதற்கான முதல்கட்ட பணிகள் நிறைவடைந்து, கால்வாயில் தண்ணீர் திறந்து விட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உடுமலை,

பரம்பிக்குளம்- ஆழியாறு பாசன திட்டத்தில் காண்டூர் கால்வாய் மூலம் உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் திருப்பூர், கோவை மாவட்டங்களில் மொத்தம் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த பாசன பகுதிகள் 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 6 மாதங்களுக்கு ஒரு மண்டலம் வீதம் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இந்த நிலையில் உடுமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரிய கோட்டை ஊராட்சி பகுதியில் வெஞ்சமடையில் இருந்து சிவலிங்கம் பிள்ளை லே-அவுட், தாராபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வழியில் சுந்தர் நகர் பகுதியிலும், யு.கே.பி.நகர் அருகிலும் பி.ஏ.பி.கால்வாயின் குறுக்கே, பழுதடைந்திருந்த 2 பாலங்கள் பி.ஏ.பி.பொதுப்பணித்துறையின் அனுமதி பெற்றுகடந்த வாரம், ஊராட்சி நிர்வாகத்தினரால் அகற்றப்பட்டு அங்கு ஒவ்வொரு இடத்திலும் தாய் திட்டத்தில் தலா ரூ.16 லட்சம் செலவில் புதிய பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன.

பி.ஏ.பி.பாசன திட்டத்தில் 4-வது மண்டல பாசனத்திற்கான தண்ணீர் திறந்து விடப்படஉள்ள நிலையில் பாலம் கட்டும் பணிகள் நடக்கிறதே. அதனால் உடுமலை கால்வாயில் தண்ணீர் வருமா என்று சிலர் சந்தேகப்பட்டனர். ஆனால் பாசனத்திற்காக தண்ணீர் செல்வதில் தடைகள் வரக்கூடாது என்று கருதி பாலம் கட்டும் இடங்களில் கால்வாயின் 2 கரைப்பகுதியிலும் கான்கிரீட் தடுப்பு சுவர்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த கான்கிரீட் தடுப்பு சுவர் கட்டும் பணிகள் நடந்து முடிந்தது. இந்த நிலையில் 4-வது மண்டல பாசனத்திற்காக திருமூர்த்தி அணையில் இருந்து கடந்த 25-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டு பி.ஏ.பி.பிரதான கால்வாயில் சென்று கொண்டுள்ளது. இந்த தண்ணீர் தற்போது பிரதான கால்வாயில் இருந்து உடுமலை கால்வாயிலும் திறந்து விடப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் நேற்று உடுமலை கால்வாயில் முழு கொள்ளளவில் பாசனத்திற்கு சென்றுகொண்டிருந்தது.

சுந்தர் நகர் மற்றும் யு.கே.பி.நகர் அருகில் ஆகிய இடங்களில் பி.ஏ.பி.கால்வாயின் குறுக்கே பாலம் கட்டும் பணிகளில் முதல் கட்ட பணியாக தற்போது தண்ணீர் பாசனத்திற்கு செல்லும் வகையில் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் பாசனத்திற்கான தண்ணீர் தடையின்றி சென்று கொண்டுள்ளது. அதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பி.ஏ.பி.4-ம் மண்டல பாசனத்திற்கான தண்ணீர் 135 நாட்களில் குறிப்பிட்ட இடை வெளிவிட்டு 4 சுற்றுகள் விடப்படும். தற்போது உடுமலை கால்வாயில் விடப்பட்டுள்ள தண்ணீர் முதல் சுற்று முடிந்ததும் நிறுத்தப்பட்டு அடுத்த சுற்றுக்கான தண்ணீர் திறந்து விடப்படக்கூடிய இடைவெளி நாட்களில் இந்த 2 இடங்களிலும் (சுந்தர் நகர்,யு.கே.பி.நகர் அருகில்) கால்வாயின் மேல்பகுதியில் வாகனங்கள் சென்று வரும் வகையில் கட்டப்பட வேண்டிய பாலம் கட்டி முடிக்கப்பட்டு விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story