புரட்டாசி பெருந்திருவிழாவையொட்டி கல்யாண வெங்கடரமணசாமி கோவிலில் அடிப்படை வசதிகேட்டு கலெக்டரிடம் மனு


புரட்டாசி பெருந்திருவிழாவையொட்டி கல்யாண வெங்கடரமணசாமி கோவிலில் அடிப்படை வசதிகேட்டு கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 30 Sep 2019 11:00 PM GMT (Updated: 30 Sep 2019 7:46 PM GMT)

கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கல்யாண வெங்கடரமணசாமி கோவிலில் புரட்டாசி பெருந்திருவிழா நடைபெற்று வருவதையொட்டி அடிப்படை வசதிகேட்டு கலெக்டரிடம் மனு கொடுக்கப் பட்டது.

கரூர்,

கரூரில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

கூட்டத்தில், தமிழ்நாடு கொங்குநாடு வேட்டுவகவுண்டர் சங்கம் மற்றும் இளைஞர் அணி சார்பில் மாவட்ட செயலாளர் முருகேசன் உள்பட நிர்வாகிகள் கொடுத்த மனுவில், தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமணசாமி கோவிலில் நடைபெற்று வருகிற புரட்டாசி பெருந்திருவிழாவில் வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் பலர் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். ஆனால் குடிநீர், கழிவறை, குளியலறை போன்ற அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லாததால் பக்தர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். மேலும் கோவில் நிர்வாகத்திற்கு சம்பந்தமில்லாத நபர்கள் சிலர் வி.ஐ.பி. பாஸ் வழியில் பணம் வாங்கி கொண்டு பக்தர்கள் சிலரை அழைத்து செல்வது வாடிக்கையாக இருக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்து இருந்தனர்.

துணைமின் நிலையம் அமைக்க வேண்டும்

கடவூர் தாலுகா இயற்கை கிராம முன்னேற்ற அமைப்பு சார்பில் அளித்த மனுவில், கடவூரில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, அங்கன்வாடியில் 270-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மேல் படித்து வருகின்றனர். அந்த பள்ளி வளாகத்தில் சுற்றித்திரியும் குரங்குகளால் மாணவர்கள் கடும் அவதிக்கு ள்ளாகின்றனர். எனவே அதனை பிடித்து தரக்கோரி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கடவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்திட வேண்டும். கடவூரில் மின்தேவையை பூர்த்தி செய்யும் விதமாக துணை மின்நிலையம் அமைக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

சட்டவிரோத மது விற்பனை

கரூரை சேர்ந்த சூர்யாகதிரவன் உள்ளிட்ட சிலர் கொடுத்த மனுவில், நாளை (புதன்கிழமை) மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கரூர் நகராட்சி காந்தி பூங்கா, கரூர் லைட்அவுஸ் அமராவதி பாலம் அருகேயுள்ள காந்தி சிலை ரவுண்டானா ஆகியவற்றை இளைஞர்கள் சார்பில் தூய்மைப்படுத்திட அனுமதி வழங்கிட வேண்டும் என மனு கொடுத்தனர்.

சாமானிய மக்கள் நலக்கட்சி மாவட்ட செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் அளித்த மனுவில், கரூர் மாவட்ட அமராவதி, காவிரி ஆறுகளில் மணற்கொள்ளையை தடுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மண்மங்கலம் தாலுகா, சேலம் தேசிய நெடுஞ்சாலை, கோவை ரோடு, வையாபுரி நகர் ஆகிய இடங்களில் சந்துக்கடைகளில் சட்டவிரோத மது விற்பனை நடக்கிறது. எனவே மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித் திருந்தனர். மனுக்களை பெற்ற கலெக்டர், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார்.

இதில், மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அதிகாரி லீலாவதி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் பாலசுப்ரமணியன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி கணே‌‌ஷ் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இலவசமாக மனுக்கள்

கடந்த வாரம் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் போது, இலவசமாக மனு எழுதி கொடுக்க கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை ஏற்று நேற்று கலெக்டர் அலுவலகத்தில் தன்னார்வலர்கள் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக மனு எழுதி கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Next Story