திருவெறும்பூர் அருகே பெல் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.1½ லட்சம், பொருட்கள் திருட்டு


திருவெறும்பூர் அருகே பெல் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.1½ லட்சம், பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 9 Oct 2019 11:00 PM GMT (Updated: 9 Oct 2019 4:36 PM GMT)

திருவெறும்பூர் அருகே பெல் நிறுவன ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் மற்றும் பொருட்களை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகள், தீபாவளி புத்தாடைகளையும் அள்ளிச்சென்றனர்.

பொன்மலைப்பட்டி,

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள சி.கே.பி. கார்டன் பகுதியில் வசித்து வருபவர் சுடலைமணி (வயது 37). இவர் பெல் நிறுவனத்தில் கிரேன் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். மேலும் கூத்தைப்பார் பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து மாட்டுப்பண்ணை அமைத்து தொழில் தொடங்க ஏற்பாடு செய்து வருகிறார்.

இதற்காக தனது மனைவியின் நகையை அடகுவைத்து, ரூ.5 லட்சம் கடன் பெற்ற சுடலைமணி, அதில் ரூ.3½ லட்சத்தை செலவு செய்துவிட்டு, மீதம் ரூ.1½ லட்சத்தை வீட்டில் வைத்திருந்தார். நேற்று முன்தினம் மாட்டுப்பண்ணையை பார்க்க சென்ற சுடலைமணி அங்கேயே தங்கிவிட்டார். பின்னர் நேற்று காலை அவர் வீட்டிற்கு திரும்பினார்.

ரூ.1½ லட்சம் திருட்டு

அப்போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததுடன், வீட்டில் இருந்த அலமாரிகளும், பீரோவும் திறந்து கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த ரூ.1½ லட்சம், வெள்ளி கொலுசுகள், வெளிநாட்டு கைக்கெடிகாரங்கள், டி.வி.டி. பிளேயர், ஸ்பீக்கர் மற்றும் தீபாவளிக்காக எடுத்து வைத்திருந்த புத்தாடைகள் ஆகியவை திருட்டு போயிருந்தன.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சுடலைமணி, இதுபற்றி திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள், வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்களை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story