மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் திருச்சியில் மறியல் போராட்டம் 1,140 பேர் கைது


மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் திருச்சியில் மறியல் போராட்டம் 1,140 பேர் கைது
x
தினத்தந்தி 10 Oct 2019 11:00 PM GMT (Updated: 10 Oct 2019 7:47 PM GMT)

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மறியல் போராட்டம் நடத்தினார்கள். அவர்களில் 1,140 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

தமிழக மின் வாரியத்தில் பல ஆண்டுகளாக சுமார் 10 ஆயிரம் பேர் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருகிறார்கள். இவர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று சி.ஐ.டி.யு. மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.

திருச்சி தென்னூரில் உள்ள மின் வாரிய மண்டல தலைமை பொறியாளர் அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு சங்கத்தின் மாநில துணை தலைவர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். பழனியாண்டி, செல்வம், ரவிச்சந்திரன், அந்தோணிசாமி, ரியாசுதீன் முன்னிலை வகித்தனர்.

ஒப்பந்த ஊழியர்கள்

மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்து ரெங்கராஜன் பேசும் போது கூறியதாவது:-

கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பின்போது சரிந்து விழுந்து கிடந்த ஆயிரக்கணக்கான மின் கம்பங்களை ஒப்பந்த ஊழியர்கள் தான் சரி செய்தனர். அப்போது அவர்கள் செய்த பணியை பாராட்டிய மின்சார துறை அமைச்சர் உடனடியாக அவர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஆனால் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. பணி நிரந்தரம் செய்வதற்கு முன்பாக ஒப்பந்த ஊழியர்களுக்கு தினக்கூலி ரூ.380 மற்றும் அடையாள அட்டை வழங்கும்படி கேட்கிறோம். அதனை கூட தமிழக அரசு நிறைவேற்றி தரவில்லை. ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் கருணை தொகை வழங்கவேண்டும். இல்லையென்றால் எங்கள் போராட்டம் இன்னும் தீவிரம் அடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

1,140 பேர் கைது

கோரிக்கைகளை விளக்கி மண்டல செயலாளர் அகஸ்டின், மாநில துணை தலைவர் ராஜாராமன், திருச்சி பெருநகர் வட்ட செயலாளர் செல்வராசு, பொருளாளர் இருதயராஜ், திருச்சி புறநகர் மாவட்ட சி.ஐ.டி.யு. தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினார்கள்.

இதனைத்தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 1,140 பேரை தில்லைநகர் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் உறையூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மாலை வரை தங்கவைக்கப்பட்டு இருந்தனர்.

Next Story