கிருஷ்ணகிரியில் கோவில் குளத்தில் மூழ்கி பக்தர் பலி


கிருஷ்ணகிரியில் கோவில் குளத்தில் மூழ்கி பக்தர் பலி
x
தினத்தந்தி 12 Oct 2019 11:00 PM GMT (Updated: 12 Oct 2019 9:44 PM GMT)

கிருஷ்ணகிரியில் கோவில் குளத்தில் மூழ்கி பக்தர் பலியானார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் திருவண்ணாமலை சாலையில் கணபதி நகர் 3-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் பாபு (வயது 27). இவர் பெங்களூருவில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் ஊருக்கு வந்திருந்தார். நேற்று புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி கணவாய்ப்பட்டி வெங்கட்ரமண சாமி கோவிலுக்கு பாபு சென்றார்.

இதையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள குளத்தில் பாபு குளிக்க சென்றார். அவர் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது பாபு எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் இது தொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விசாரணை

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story