குடும்ப பிரச்சினையில் தொழிலாளி குத்திக்கொலை; உறவினர் கைது


குடும்ப பிரச்சினையில் தொழிலாளி குத்திக்கொலை; உறவினர் கைது
x
தினத்தந்தி 13 Oct 2019 9:00 PM GMT (Updated: 13 Oct 2019 1:54 PM GMT)

மேலூர் அருகே குடும்ப பிரச்சினையில் தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக உறவினரை போலீசார் கைது செய்தனர்.

மேலூர்,

மேலூர் அருகே உள்ள அ.வல்லாளபட்டியை சேர்ந்தவர் ஹக்கீம்(வயது 43). இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் ஹக்கீமை விட்டு மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதற்கிடையே அவர் மதுரையில் உள்ள கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று அ.வல்லாளபட்டியில் உள்ள தனது தம்பி அப்பாஸ் வீட்டிற்கு ஹக்கீம் சென்றார். அங்கு அவர் குடிபோதையில் சென்றதாக கூறப்படுகிறது. இதனை அப்பாசின் மனைவி மரியம்பீவி தட்டிக்கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த ஹக்கீம் தகாத வார்த்தைகளால் பேசி, மரியம்பீவியை தாக்கியுள்ளார்.

இதனை பார்த்து கொண்டிருந்த மரியம்பீவியின் தம்பி முகமது இப்ராகிம்(27) ஆத்திரமடைந்து, வீட்டின் சமையல் அறையில் இருந்த கத்தியால் ஹக்கீமை சரமாரியாக குத்தினார். இதில் நிலைகுலைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்துபோனார். இதுகுறித்து தகவல் அறிந்த மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) சுந்தரமாணிக்கம், மேலவளவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனியப்பன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்றனர். அங்கு ஹக்கீமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் கொலை தொடர்பாக மேலவளவு போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து முகமது இப்ராகிமை கைது செய்தனர்.

Next Story