குமரி மாவட்டத்தில், தொடர் மழைக்கு மேலும் 3 வீடுகள் இடிந்தன


குமரி மாவட்டத்தில், தொடர் மழைக்கு மேலும் 3 வீடுகள் இடிந்தன
x
தினத்தந்தி 18 Oct 2019 10:30 PM GMT (Updated: 18 Oct 2019 7:47 PM GMT)

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மேலும் 3 வீடுகள் இடிந்து விழுந்தன.

நாகர்கோவில்,

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் இதுவரை விட்டு விட்டும், தொடர்ந்தும் மழை பெய்து வருகிறது.

நேற்று காலையிலும் நாகர்கோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்த மழையினால் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவ-மாணவிகள் குடைகளை பிடித்தபடியும், நனைந்தபடியும் சென்றதை காண முடிந்தது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்ட பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-

பேச்சிப்பாறை- 6.4, சிற்றார் 1- 5.8, மாம்பழத்துறையாறு- 3, பொய்கை- 4, முக்கடல் அணை- 7, பூதப்பாண்டி- 3.2, கன்னிமார்- 1.4, கொட்டாரம்- 6.2, குழித்துறை- 2.6, மயிலாடி- 5.2, நாகர்கோவில்- 16.2, தக்கலை- 4, ஆரல்வாய்மொழி- 4, குருந்தங்கோடு- 13, முள்ளங்கினாவிளை- 6, ஆனைக்கிடங்கு- 4.2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது. இதில் அதிகபட்சமாக நாகர்ே்காவில் பகுதியில் 16.2 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.

இந்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 119 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 215 கன அடி தண்ணீரும், சிற்றார்-1 அணைக்கு 200 கன அடி தண்ணீரும், மாம்பழத்துறையாறு அணைக்கு 26 கன அடி தண்ணீரும் வருகிறது.

இந்த மழையினால் கடந்த சில தினங்களுக்கு முன் திருவட்டார், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 3 தாலுகா பகுதிகளில் 9 வீடுகள் இடிந்து விழுந்தன.இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையில் திருவட்டார் தாலுகா பகுதியில் 2 வீடுகளும், விளவங்கோடு தாலுகா பகுதியில் ஒரு வீடும் ஆக 3 வீடுகள் இடிந்து, பகுதி அளவு சேதம் அடைந்தன. 

Next Story