டெங்கு கொசுக்கள் உற்பத்திக்கு காரணமாக இருந்த ஒர்க்ஷாப் உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்


டெங்கு கொசுக்கள் உற்பத்திக்கு காரணமாக இருந்த ஒர்க்ஷாப் உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 20 Oct 2019 10:15 PM GMT (Updated: 20 Oct 2019 2:44 PM GMT)

பண்ருட்டியில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாக காரணமாக இருந்த ஒர்க்ஷாப் உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டார்.

பண்ருட்டி,

கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை முற்றிலும் அகற்றும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தேவையற்ற பொருட்கள், குப்பைகளை சுற்றுப்புறங்களில் தூக்கி எரிவதை தவிர்த்து அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் கொட்ட வேண்டும் என்று பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பண்ருட்டி நகராட்சி பகுதியில் நடந்து வரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் நேற்று திடீரென ஆய்வு செய்தார். காலை 7 மணிக்கு பண்ருட்டி நகராட்சி அலுவலகத்துக்கு வந்த அவர், அங்கு பொது சுகாதார பணியாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புறையாளர்களிடம் நகராட்சியில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து அவர்களிடம் துரிதமாக செயல்பட்டு நகராட்சி முழுவதும் ஒரு வீடுகள் கூட விடுபடாமல் ஆய்வு செய்து டெங்கு கொசு புழுக்கள் உருவாக கூடிய இடங்களை கண்டறிந்து முற்றிலுமாக அழித்திட வேண்டும் என்று உத்தரவிட்டார். இதை தொடர்ந்து போலீஸ் லைன் 7-வது தெரு முழுவதும் ஒவ்வொரு வீடாக சென்று கலெக்டர் ஆய்வு செய்தார்.

 அங்கு டெங்கு கொசுக்கள் உருவாக கூடிய வகையில் தண்ணீர் தேங்கி நிற்கிறதா, தேங்கி இருக்கும் தண்ணீரில் கொசுப்புழுக்கள் உள்ளனவா? என்றும் பார்வையிட்டார். மேலும் அந்த பகுதியில் வினியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவை பரிசோதனை செய்ய சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் திருவதிகை பகுதிக்கு சென்ற கலெக்டர் அன்புசெல்வன், அங்கு இருந்த ஒர்க்க்ஷாப், பழைய இரும்பு கடைகளில் தேங்கி இருந்த தண்ணீரை பரிசோதணை செய்தார். அப்போது அந்த தண்ணீரில் டெங்கு நோயை பரப்பும் கொசுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை எடுத்து ஒர்க்ஷாப் உரிமையாளர் சக்திவேல் என்பவருக்கு ரூ.25 ஆயிரமும், மற்றொரு பழைய இரும்பு கடை உரிமையாளருக்கு ரூ.5000 ஆயிரமும் அபராதத்தையும் விதித்தார். அதோடு சக்திவேல் மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து செட்டிபட்டறை காலனி பகுதியில் உள்ள வீடுகள், அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிட பகுதிகளையும் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றதால், அதை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கமாறு நகராட்சி ஆணையர் செல்வபாலாஜிக்கு அவர் உத்தரவிட்டார்.

ஆய்வின் போது சுகாதார துணை இயக்குனர் கீதா, நகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி, தாசில்தார் உதயகுமார், துப்புரவு அலுவலர் சக்திவேல், பொறியாளர் மகாராஜன், நகரமைப்பு அலுவலர் செல்வம், நகராட்சி துப்புறவு ஆய்வாளர்கள் திண்ணாயிரம் மூர்த்தி, ஆரோக்கியசாமி, தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் சாருமதி,வருவாய் அலுவலர் கிருஷ்ணா, கிராம அதிகாரி தனபதி ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story