முட்புதரில் உடல் வீச்சு: ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை தலையை தேடும் பணி தீவிரம்


முட்புதரில் உடல் வீச்சு: ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை தலையை தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 20 Oct 2019 10:45 PM GMT (Updated: 20 Oct 2019 8:09 PM GMT)

மாயமானதாக தேடப்பட்ட ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். முட்புதரில் தலையில்லாத அவரது உடல் மட்டும் மீட்கப்பட்டது. தலையை போலீசார் தேடி வருகிறார்கள்.

பூந்தமல்லி,

சென்னையை அடுத்த புழல் விநாயகபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் என்ற கிரைம் சுரேஷ் (வயது 31). ஆட்டோ டிரைவரான இவர், பாடி ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வந்தார். இவர் மீது கொளத்தூர், ராஜமங்கலம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

கடந்த 14-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சுரேஷ், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுபற்றி சுரேசின் தாயார் கலா (54) அளித்த புகாரின் பேரில் கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சுரேசை தீவிரமாக தேடி வந்தனர்.

இதுதொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், மாயமான சுரேசுக்கும், பாடி கலைவாணர் நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சுரேசை அழைத்து பேசியபோது வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரத்தில் சுரேசை வெட்டிக்கொலை செய்ததும், பின்னர் அவரது தலையை துண்டித்து, உடலை மட்டும் செங்குன்றத்தை அடுத்த விளாங்காடுபாக்கம் அருகே முட்புதரில் வீசியதும், தலையை வேறு ஒரு இடத்தில் வீசியதும் தெரிந்தது.

இதையடுத்து விளாங்காடுபாக்கத்துக்கு விரைந்து சென்ற போலீசார், முட்புதரில் அழுகிய நிலையில் கிடந்த சுரேசின் தலையில்லாத உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் மாயமான சுரேசின் தலையை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். அதே பகுதியில் வீசினார்களா? அல்லது அடையாளம் தெரியாமல் இருக்க வேறு எங்காவது வீசினார்களா? எனவும், இந்த கொலையில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்றும் பிடிபட்ட நபரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story