நீலகிரியில் தொடரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் கிடு, கிடு உயர்வு


நீலகிரியில் தொடரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் கிடு, கிடு உயர்வு
x
தினத்தந்தி 22 Oct 2019 10:45 PM GMT (Updated: 22 Oct 2019 6:31 PM GMT)

நீலகிரியில் தொடரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் கிடு, கிடுவெ உயர்ந்து வருகிறது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது. கனமழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் கிடு, கிடுவென உயர்ந்து வருகிறது.

ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு 1 லட்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஊட்டிக்கு ஆண்டுதோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். மேலும் ஊட்டியில் 500-க்கும் மேல் தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் செயல்பட்டு வருகிறது. இதனால் ஊட்டி நகருக்கு குடிநீர் தேவை அதிகமாக உள்ளது. ஊட்டியின் குடிநீர் தேவைக்கு பல்வேறு அணைகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக பார்சன்ஸ்வேலி அணை, டைகர்ஹில் அணை, மார்லிமந்து அணை, தொட்டபெட்டா அப்பர் அணை, கோடப்பமந்து அப்பர் அணை போன்ற அணைகள் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருந்து வருகின் றன. கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் அணைகளில் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டது. அதன் பின்னர் ஆகஸ்ட் மாதம் தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்ததை அடுத்து நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. கடந்த மாதம் குடிநீர் தேவைக்காக தண்ணீர் எடுக்கப்பட்டதால் அணைகளில் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டது.

இந்த நிலையில் ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வரு கிறது. அடர்ந்த வனப்பகுதிகளில் உற்பத்தியாகும் தண்ணீர் பாய்ந்தோடி அணைகளில் சேகரமாகிறது. மேலும் மண் எப்போதும் ஈரப்பதமாக இருப்பதால் தண்ணீர் ஊறிக்கொண்டே இருக்கிறது. பார்சன்ஸ்வேலி அணை 50 அடி கொள்ளளவு கொண்டது. தற்போது 48.5 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. இதனால் அணை நிரம்பும் தருவாயில் வனப்பகுதியின் நடுவே கடல்போல் காட்சி அளிக்கிறது.

டைகர்ஹில் அணையின் மொத்த கொள்ளளவான 39 அடியில் 37 அடியாக நீர்மட்டம் உயர்ந்து இருக்கிறது. தொட்டபெட்டா அப்பர் அணையின் 31 அடியில் 24 அடிக்கு தண்ணீர் உள்ளது. தொடர்ந்து கனமழை பெய்ததால் தொட்டபெட்டா லோயர், கோடப்பமந்து அப்பர், கோடப்பமந்து லோயர், ஓல்டு ஊட்டி, கிளன்ராக் ஆகிய 5 அணைகள் நிரம்பி உள்ளன. அந்த அணைகளில் இருந்து தண்ணீர் வழிந்தோடி கொண்டு இருக்கிறது. இனி வரும் மாதங்களில் ஊட்டி நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் அவலாஞ்சி, குந்தா அணைகள் திறந்து விடப்பட்டன. நேற்று அப்பர் பவானி அணை தனது முழு கொள்ளளவை எட்டியது.

இதனால் அணையின் பாதுகாப்பு கருதி மதகுகள் வழியாக உபரி நீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 260 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

Next Story