இடைத்தேர்தலில் 2 தொகுதிகளில் வெற்றி: தவறான வாக்குறுதிகளை கொடுத்த தி.மு.க.வுக்கு மரணஅடி - பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி


இடைத்தேர்தலில் 2 தொகுதிகளில் வெற்றி: தவறான வாக்குறுதிகளை கொடுத்த தி.மு.க.வுக்கு மரணஅடி - பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி
x
தினத்தந்தி 24 Oct 2019 11:15 PM GMT (Updated: 24 Oct 2019 5:32 PM GMT)

இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க.வெற்றி பெற்றுள்ளது. இது தவறான வாக்குறுதிகளை கொடுத்த தி.மு.க.வுக்கு மரணஅடி என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.

பொள்ளாச்சி,

நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டசபை இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. இதையடுத்து பொள்ளாச்சி பஸ் நிலையம் அருகில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இந்த நிகழ்ச்சிக்கு கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் கோவை புறநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜேம்ஸ்ராஜா, பொள்ளாச்சி நகர பொருளாளர் கனகராஜ், மாவட்ட பிரதிநிதி அருணாசலம், கோவை புறநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் வசந்த், நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம், முன்னாள் கவுன்சிலர் லிங்கபாண்டி மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

கடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தி.மு.க. தலைவர் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றினார்.அதன் பிறகு நடைபெற்ற வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் தொடங்கிய மக்களின் கோபம் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகியசட்டமன்ற இடைத் தேர்தலில் வெளிப்பட்டுள்ளது. இனிமேல் தி.மு.க, எந்த தேர்தலிலும் ஓட்டு கேட்கச் சென்றாலும் நாடாளுமன்ற தேர்தலின் போதுகொடுத்த வாக்குறுதி என்ன? ஆனது என்று தான் மக்கள் கேட்பார்கள். தவறான வாக்குறுதிகளை கொடுத்த தி.மு.க.விற்கு இந்த 2 தொகுதிகளின் இடைத்தேர்தலிலும் சரியான மரண அடி கிடைத்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே தெரிவித்த சபதத்தின்படி வருகின்ற உள்ளாட்சி தேர்தலிலும், 2021-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் அ.தி.மு.க. தான் அமோக வெற்றி பெறும். இந்த இடைத் தேர்தல் வெற்றிதொடரும். மக்களுக்கு பொய்யான வாக்குறுதியை கொடுத்து வரும் தி.மு.க.வின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது கோவை மத்திய கூட்டுறவு வங்கிதலைவர் கிருஷ்ண குமார், பொள்ளாச்சி மேற்கு அ.தி.மு.க.செயலாளர் ஆர்.ஏ. சக்திவேல் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story