கொடைக்கானல் அருகே முதியவரின் கழுத்தை நெரித்து கொன்ற விவசாயி கைது


கொடைக்கானல் அருகே முதியவரின் கழுத்தை நெரித்து கொன்ற விவசாயி கைது
x
தினத்தந்தி 25 Oct 2019 11:00 PM GMT (Updated: 25 Oct 2019 7:07 PM GMT)

கொடைக்கானல் அருகே முதியவரின் கழுத்தை நெரித்து கொலை செய்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

கொடைக்கானல்,

கொடைக்கானல் அருகே உள்ள பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன்(வயது 63). இவரது மகன் சிவமுருகன் (16). இவன் அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். அந்த பள்ளியில் பூண்டி கிராமத்தை சேர்ந்த முருகன் (48) மகன் உமாநாத்தும் (15) 10-ம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் லோகநாதனும், முருகனும் மகன்களுக்கு மதிய உணவு கொண்டு சென்றனர். அங்கு உணவை கொடுத்து விட்டு முருகன், லோகநாதனிடம் உனது மகன் சரியில்லாத காரணத்தால் எனது மகனும் கெட்டு போகிறான் என்று வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது எனது மகனை நீ எப்படி அவ்வாறு பேசலாம்? என்று லோகநாதன் தட்டிக்கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் முருகன் தகாத வார்த்தைகளால் பேசி லோகநாதனை கீழே தள்ளி விட்டதுடன் அங்கு நின்று கொண்டு இருந்த சிவமுருகனையும் தாக்கினார். பின்னர் அவர் லோகநாதனின் கழுத்தை நெரித்ததாக கூறப்படுகிறது இதில் அவர் மயக்கமடைந்தார். இதையடுத்து அவரை பள்ளியின் ஆசிரியர் வாசிமலை என்பவர் மன்னவனூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் லோகநாதன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து லோகநாதன் மனைவி சாந்தி கொடைக்கானல் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், சப்-இன்ஸ்பெக்டர் காதர்மைதீன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story