வில்லியனூர் அருகே ரவுடிக்கு கத்தி வெட்டு; இறைச்சி வியாபாரி கைது


வில்லியனூர் அருகே ரவுடிக்கு கத்தி வெட்டு; இறைச்சி வியாபாரி கைது
x
தினத்தந்தி 28 Oct 2019 10:45 PM GMT (Updated: 28 Oct 2019 7:36 PM GMT)

வில்லியனூர் அருகே ரவுடியை கத்தியால் வெட்டிய சம்பவத்தில் இறைச்சி வியாபாரியை போலீசார் கைது செய்தனர். அவருடைய மகன்கள் 2 பேரை தேடி வருகிறார்கள்.

வில்லியனூர்,

புதுச்சேரி வெங்கட்டாநகரை சேர்ந்தவர் சக்தி (வயது 27), ரவுடியான அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால் அவரை 2 மாதம் ஊருக்குள் நுழைய தடை விதித்து கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். அதனால் அவர் வில்லியனூரை அடுத்த கூடப்பாக்கம் அம்பேத்கர் வீதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை அவர் அந்த பகுதியில் மேளம் அடித்து ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதனை அந்த பகுதியில் இறைச்சி கடை நடத்தி வரும் கிருஷ்ணன் கண்டித்தார். அதனால் ஆத்திரம் அடைந்த சக்தி தகாத வார்த்தைகளால் கிருஷ்ணனை திட்டி அவர் மீது தண்ணீரை ஊற்றினார்.

அதுகுறித்து அறிந்ததும் கிருஷ்ணனின் மகன் கன்னியப்பன் ரவுடி சக்தியை தட்டிக்கேட்டார். அப்போது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை பத்துக்கண்ணு சாலையில் கிருஷ்ணன், அவருடைய மகன்கள் கன்னியப்பன், இளையராஜா ஆகியோர் மாட்டு இறைச்சி விபாயாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது ரவுடி சக்தி அங்கு வந்து கிருஷ்ணனிடம் தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணன், அவருடைய மகன்கள் 2 பேரும் சேர்ந்து சக்தியை திருப்பி தாக்கினர். மேலும் இளையராஜா தான் கையில் வைத்திருந்த இறைச்சி வெட்டும் கத்தியால் ரவுடி சக்தியை வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயம் அடைந்த ரவுடி சக்தி சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேலு, சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குப்பதிவு செய்து இறைச்சி வியாபாரி கிருஷ்ணனை கைது செய்தனர். அவருடைய மகன்கள் 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story