குமரி மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் 5–வது நாளாக வேலைநிறுத்தம்


குமரி மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் 5–வது நாளாக வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 29 Oct 2019 10:45 PM GMT (Updated: 29 Oct 2019 2:46 PM GMT)

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த 25–ந்தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.

நாகர்கோவில்,

தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு டாக்டர் பணியிடங்களை அரசாணைப்படி அமல்படுத்த வேண்டும், பட்டமேற்படிப்பில் தமிழக அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த 25–ந்தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. குமரி மாவட்டத்திலும் அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 5–வது நாளாக இந்த போராட்டம் நீடித்தது. நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று டாக்டர்கள் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்பாலன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முரளீதரன், ஆல்பிரட் சந்திரசேகர், பகவத், கோசல்ராம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நேற்று 85 சதவீத டாக்டர்களும், குழித்துறை, தக்கலை, பூதப்பாண்டி ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளில் 100 சதவீத டாக்டர்களும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 50 சதவீத டாக்டர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதாக  அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்பாலன் தெரிவித்தார்.


Next Story