மாயமானார் என கூறப்பட்ட போது முகிலன் எங்கு இருந்தார்? மதுரை ஐகோர்ட்டு கேள்வி


மாயமானார் என கூறப்பட்ட போது முகிலன் எங்கு இருந்தார்? மதுரை ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 30 Oct 2019 11:00 PM GMT (Updated: 30 Oct 2019 6:39 PM GMT)

மாயமானார் என கூறப்பட்ட போது முகிலன் எங்கு இருந்தார்? என மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.

மதுரை,

ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் முகிலன் என்ற சண்முகம் (வயது 53). இவர், இயற்கை வளங்களை பாதுகாப்பது, ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டங்களில் பங்கெடுத்து வந்தார்.

அவர் சென்னையில் கடந்த பிப்ரவரி மாதம் திடீரென மாயமானார். அவரை ஆஜர்படுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவர் மாயமான வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் 6–ந்தேதி திருப்பதி ரெயில் நிலையத்தில் வைத்து அவரை போலீசார் கைது செய்தனர். தற்போது அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே அவர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்பேரில் கரூர் மாவட்டம் குளித்தலை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு முகிலன், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, ‘‘முகிலன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உள்ளது. அவர் மாயமான சம்பவத்துக்கும், போலீசாருக்கும் தொடர்பு இல்லை’’ என்று வாதாடினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘‘கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை முகிலன் எங்கு இருந்தார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்“ என்றார்.

பின்னர் இந்த மனு மீதான விசாரணையை வருகிற 6–ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story