அரசு மருத்துவமனை டாக்டர்கள் 7-வது நாளாக வேலை நிறுத்தம் நோயாளிகள் பாதிப்பு


அரசு மருத்துவமனை டாக்டர்கள் 7-வது நாளாக வேலை நிறுத்தம் நோயாளிகள் பாதிப்பு
x
தினத்தந்தி 31 Oct 2019 11:00 PM GMT (Updated: 31 Oct 2019 3:56 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள் நேற்று 7-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பாதிப்படைந்தனர்.

பெரம்பலூர்,

தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ பணியிடங்களை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த 25-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் அந்த கூட்டமைப்பை சேர்ந்த டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று 7-வது நாளாக டாக்டர்களின் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. அவர்கள் அவசர சிகிச்சைகள் தவிர, மற்ற பிரிவுகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நோயாளிகள் பாதிப்பு

பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, கிருஷ்ணாபுரம், வேப்பூர், காரை ஆகிய பகுதிகளில் உள்ள வட்டார அரசு மருத்துவமனைகள் மற்றும் கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், புறநோயாளிகள் பிரிவுகளில் சிகிச்சை பெற வந்த நோயாளிகள், சிகிச்சை பெற முடியாமல் பாதிப்படைந்தனர். இதனால் பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தை சேர்ந்த டாக்டர்கள் புறநோயாளிகள் பிரிவுகளில் பணிபுரிந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

இந்நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட டாக்டர்கள், பெரம்பலூர் அரசு மருத்துவமனை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

Next Story