திருவேற்காட்டில் வாலிபர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை பூந்தமல்லி கோர்ட்டு தீர்ப்பு


திருவேற்காட்டில் வாலிபர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை பூந்தமல்லி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 31 Oct 2019 10:30 PM GMT (Updated: 31 Oct 2019 5:58 PM GMT)

வாலிபர் கொலை வழக் கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்த மல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.

பூந்தமல்லி,

சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர் ஏசுகுமார் (வயது 28). இவர், திருவேற் காடு அடுத்த கோலடியில் உள்ள அலுமினியம் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அவருடன் வேலை செய்துவந்த சீர்காழியை சேர்ந்த சிலம்பரசன் (25), ரகு ஆனந்தன்(24) ஆகியோர் ஏசுகுமார் குறித்து மற்றவர்களிடம் தவறாக பேசியதாக தெரிகிறது.

இதை ஏசுகுமார் தட்டிக்கேட்டதால் 3 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதில் ஆத்திரம் அடைந்த சிலம்பரசன், ரகு ஆனந்தன் இருவரும் 30-12-2013 அன்று ஏசுகுமாரை கட்டையால் அடித்துக்கொன்றனர்.

பிடிவாரண்டு

இந்த சம்பவம் குறித்து திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசன், ரகு ஆனந்தன் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 3-ல் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி அம்பிகா, வழக்கு விசாரணை முடிந்து கடந்த வாரம் தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்து இருந்தார். ஆனால் இருவரும் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால் அவர்களுக்கு நீதிபதி பிடிவாரண்டு பிறப்பித்தார்.

இதையடுத்து சீர்காழியில் பதுங்கி இருந்த சிலம்பரசன், ரகுஆனந்தன் இருவரையும் திருவேற்காடு போலீசார் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

2 பேருக்கு ஆயுள் தண்டனை

அதைதொடர்ந்து இந்த வழக்கில் நீதிபதி அம்பிகா தீர்ப்பு நேற்று வழங்கினார். அதில், சிலம்பரசன், ரகுஆனந்தன் ஆகியோர் மீது கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இருவருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 8 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் அந்தமான்முருகன் ஆஜராகி வாதாடினார்.

Next Story