பருவம் தவறிய மழை: பயிர்சேதம் குறித்து மந்திரிசபை துணைக்குழு விவாதிக்கும் தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு


பருவம் தவறிய மழை: பயிர்சேதம் குறித்து மந்திரிசபை துணைக்குழு விவாதிக்கும் தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு
x
தினத்தந்தி 2 Nov 2019 12:23 AM GMT (Updated: 2 Nov 2019 12:23 AM GMT)

மராட்டியத்தில் பருவம் தவறிய மழையால் ஏற்பட்டுள்ள பயிர்சேதம் குறித்து மந்திரிசபை துணைக்குழு விவாதிக்கும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் சில மாவட்டங்களில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பருவம் தவறிய கனமழை பெய்து வருகிறது. கியார் புயல் காரணமாகவும் பலத்த மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு காத்திருந்த பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இதுகுறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

பருவம் தவறிய மழையால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து சனிக்கிழமை(இன்று) மந்திரிசபை துணைக்குழு கூடி விவாதிக்கும். விவசாயிகள் பிரச்சினையை தீர்க்க மத்திய அரசிடம் இருந்து உதவி பெறப்படும். பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மாவட்ட பொறுப்பு மந்திரிகளை மழையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று நிலைமையை பார்வையிடுமாறு தெரிவித்துள்ளேன். இந்த பிரச்சினையை மாநில அரசு தீவிரமாக கையாண்டு வருகிறது.

முதல்கட்ட ஆய்வில் 12 மாவட்டங்களில் உள்ள 325 தாலுகாக்களில் 54 லட்சத்து 22 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்களில் பயிர்கள் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பயிர்களில் சோளம், நெல், பருத்தி மற்றும் சேயாபீன்ஸ் போன்றவை அடங்கும்.

சேத மதிப்பீட்டை அடுத்த வாரத்திற்குள் முழுமையாக அளிக்க அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story