விஷவண்டு கடித்ததில் மரணமடைந்த: புதுச்சேரி மாநில அ.தி.மு.க. செயலாளர் உடலுக்கு - எடப்பாடி பழனிசாமி அஞ்சலி


விஷவண்டு கடித்ததில் மரணமடைந்த: புதுச்சேரி மாநில அ.தி.மு.க. செயலாளர் உடலுக்கு - எடப்பாடி பழனிசாமி அஞ்சலி
x
தினத்தந்தி 3 Nov 2019 11:00 PM GMT (Updated: 3 Nov 2019 10:35 PM GMT)

விஷவண்டு கடித்ததில் மரணமடைந்த புதுச்சேரி மாநில அ.தி.மு.க. செயலாளர் புருஷோத்தமன் உடலுக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் அஞ்சலி செலுத்தினார். சொந்த ஊரான மணவெளியில் இன்று இறுதிச் சடங்கு நடக்கிறது.

புதுச்சேரி,

புதுச்சேரி மாநில அ.தி.மு.க. செயலாளரும், அரியாங்குப்பம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான புருஷோத்தமன் நேற்று முன்தினம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த சிறுவள்ளிக்குப்பம் கிராமத்தில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தை பார்வையிட வந்தார்.

அப்போது விஷவண்டு கடித்ததில் புருஷோத்தமன் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை 11.40 மணியளவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முண்டியம்பாக்கத்துக்கு காரில் வந்து, புருஷோத்தமன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து, அவர் புருஷோத்தமனின் மனைவி ஜெயலட்சுமி, மகன் குமுதன் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.

இதையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறுகையில், ‘புருஷோத்தமனின் இழப்பு அ.தி.மு.க.வுக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், புதுச்சேரி மாநில கழக தொண்டர்களுக்கும் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

அதன்பிறகு மதியம் 12.07 மணிக்கு எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்னை சென்றார். அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், எம்.எல்.ஏ.க்கள் விக்கிரவாண்டி முத்தமிழ் செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு, புதுச்சேரி மாநில ராஜ்யசபா எம்.பி. கோகுலகிருஷ்ணன், புதுச்சேரி எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன், முன்னாள் எம்.பி. ராமதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் புருஷோத்தமன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து புருஷோத்தமனின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான புதுவை மாநிலம் மணவெளி கிராமத்திற்கு நேற்று மதியம் 1 மணியளவில் எடுத்து வரப்பட்டது. அங்கு அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி, முன்னாள் சபாநாயகர் சபாபதி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். புருஷோத்தமனின் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று காலை அவரது வீட்டிற்கு சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

புருஷோத்தமனின் இறுதி ஊர்வலம் இன்று(திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இன்று மாலை 4 மணியளவில் மணவெளி இடுகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

Next Story