திப்பு சுல்தான் ஜெயந்தி விழா ரத்து; கர்நாடக அரசு மீது சித்தராமையா கடும் தாக்கு


திப்பு சுல்தான் ஜெயந்தி விழா ரத்து; கர்நாடக அரசு மீது சித்தராமையா கடும் தாக்கு
x
தினத்தந்தி 8 Nov 2019 11:15 PM GMT (Updated: 8 Nov 2019 9:46 PM GMT)

திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவை ரத்துசெய்துள்ள கர்நாடக அரசு கயிறு இல்லாத பம்பரம் போல் ஆடிக்கொண்டிருக்கிறது என்று சித்தராமையா கடுமையாக சாடியுள்ளார்.

மைசூரு,

மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டையில் ரூ.5 கோடி செலவில் புதியதாக கனக பவன் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் கலந்துகொள்ள கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா பெங்களூருவில் இருந்து மைசூரு மண்டஹள்ளி விமான நிலையத்தில் வந்திறங்கினார்.

அங்கிருந்து வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திப்பு சுல்தான் ஜெயந்தி விழா கொண்டாட்டத்தின் போது எந்த கலவரமும், வன்முறையும் நடைபெறவில்லை. ஆனால் கர்நாடக பா.ஜனதா அரசு வன்முறை ஏற்பட்டதால் கர்நாடகத்தில் திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவை ரத்து செய்திருப்பதாக கூறியுள்ளது. திப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாட்டத்தை அரசு விழா நடத்த கூடாது என்று பா.ஜனதா மேலிடம் உத்தரவிட்டிருக்கலாம், அதனால் எடியூரப்பா கர்நாடகத்தில் திப்பு ஜெயந்தி கொண்டாட்டத்தை ரத்து செய்துள்ளார்.

ஒரு புறம் திப்பு ஜெயந்தியை அரசு விழாவாக கொண்டாடுவதை மாநில அரசு ரத்து செய்துள்ளது. மறுபுறம் வரலாற்று பாடப்புத்தகத்தில் இருந்து திப்பு சுல்தான் பாடத்தை நீக்கவும் கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தனியார் சார்பில் திப்பு சுல்தான் ஜெயந்தி விழா கொண்டாட இடம் வழங்கவும் மாநில அரசு மறுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் கயிறு இல்லாத பம்பரம் போல் கர்நாடக அரசு ஆடிக்கொண்டிருக்கிறது.

கர்நாடகத்தில் திப்பு சுல்தான் ஜெயந்தியை அரசு விழாவாக கொண்டாடுவது ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. அதே வேளையில் தனியார் சார்பில் திப்பு சுல்தான் ஜெயந்தி விழா கொண்டாட அனுமதி வழங்கவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் கர்நாடக அரசு கோர்ட்டு உத்தரவை மதிக்காமல் செயல்பட்டு வருகிறது.

தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தி வருகிறது. ஜனதாதளம்(எஸ்) கட்சி இந்த விவகாரத்தில் எப்படி செயல்பட போகிறது என்பது எனக்கு தெரியாது. நாங்கள் தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்துவோம். தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் பற்றி எடியூரப்பா பேசிய ஆடியோ விவகாரம் குறித்து ஜனாதிபதியிடம் முறையிடுவோம். விரைவில் கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள், டெல்லி சென்று ஜனாதிபதியை நேரில் சந்தித்து எடியூரப்பா ஆடியோ ஆதாரத்தை வழங்குவோம். எடியூரப்பா, அமித்ஷா ஆகியோரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story