சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் கே.வி.தங்கபாலு சந்திப்பு


சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் கே.வி.தங்கபாலு சந்திப்பு
x
தினத்தந்தி 10 Nov 2019 11:15 PM GMT (Updated: 10 Nov 2019 7:36 PM GMT)

சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் காங்கிரஸ் கட்சி முன்னாள் மாநில தலைவர் கே.வி.தங்கபாலு சந்தித்து பேசினார்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 8-ந் தேதி இரவு சேலம் வந்தார். பின்னர் அவர் நேற்று முன்தினம் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட கொங்கணாபுரத்தில் அரசு சார்பில் நடந்த விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து ஈரோட்டிற்கு சென்று தனது பாதுகாப்பு போலீஸ் அதிகாரியின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் இரவில் சேலம் வந்து சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தங்கினார்.

இந்தநிலையில், நேற்று காலை சேலம் உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் நடந்த உளுந்தூர்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. குமரகுருவின் இல்ல திருமண விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டிற்கு வந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே.வி.தங்கபாலு, முதல்-அமைச்சரின் வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் ½ மணி நேரம் நடந்தது. அதாவது, முதல்-அமைச்சரின் மாமனார் சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் அவரது மறைவுக்கு முதல்-அமைச்சரை கே.வி.தங்கபாலு நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இது தொடர்பாக கே.வி.தங்கபாலு நிருபர்களிடம் கூறுகையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மாமனார் இறப்புக்கு, இரங்கல் தெரிவிக்கும் வகையில் அவரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். அயோத்தி நில வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை வரவேற்கிறேன். எல்லா மக்களாலும் வரவேற்கக்கூடியதாகும். இந்தியாவில் அமைதி நிலவ வேண்டும், நல்லிணக்கம் வளர வேண்டும் என்ற வகையிலும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது. அயோத்தியில் ராமர் கோவிலையும், மசூதியையும் அரசே கட்டிக்கொடுத்து மக்களை திருப்திப்படுத்த வேண்டும், என்றார்.

Next Story