தூத்துக்குடி அருகே, தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு - வாலிபர் கைது


தூத்துக்குடி அருகே, தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு - வாலிபர் கைது
x
தினத்தந்தி 10 Nov 2019 10:00 PM GMT (Updated: 10 Nov 2019 7:45 PM GMT)

தூத்துக்குடி அருகே தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ஸ்பிக்நகர், 

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் அத்திமரப்பட்டியை சேர்ந்தவர் பால்துரை. இவருடைய மகள் ஜெயா (வயது 24). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தூத்துக்குடியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு, தனது தங்கை தங்கரதியுடன் இரவில் பஸ்சில் ஸ்பிக்நகர் வந்து இறங்கி னார். அங்கு இருந்து அவரது தந்தை பால்துரை மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு அழைத்து சென்று கொண்டு இருந்தார். அவர்கள் அத்திமரப்பட்டி ரோட்டில் சென்று கொண்டு இருந்த போது, பின்னால் ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அந்த மோட்டார் சைக்கிள் திடீரென பால்துரையை முந்தி சென்றது.

அப்போது, அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற மர்ம நபர் திடீரென்று ஜெயா கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் பயிற்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிள்ளைமுத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் நகையை பறித்து சென்றது அத்திமரப்பட்டி வேதகோவில் தெருவை சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் மணி (35) என்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் மணியை கைது செய்தனர்.

Next Story