சிறுமியை பலாத்காரம் செய்தவர்களை கைது செய்யக்கோரி ஜனநாயக மாதர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்


சிறுமியை பலாத்காரம் செய்தவர்களை கைது செய்யக்கோரி ஜனநாயக மாதர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 19 Nov 2019 11:00 PM GMT (Updated: 19 Nov 2019 9:11 PM GMT)

சிறுமியை பலாத்காரம் செய்தவர்களை கைது செய்யக்கோரி ஜனநாயக மாதர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதம் செய்தனர்.

சேலம்,

ஓமலூர் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி பள்ளி சென்று விட்டு வீடு திரும்பிய போது, சிலர் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்று, முட்புதரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படவில்லை.

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை கைது செய்யக்கோரி நேற்று ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் மாதர் சங்கக்தின் சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசாரிடம் அனுமதி கோரி இருந்தனர். இதனிடையே நேற்று முன்தினம் இரவு ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

திரண்டனர்

இதைத்தொடர்ந்து போலீசாரின் தடையை மீறி மாதர் சங்கத்தினர் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் அருகே வாலிபர் சங்க மாநில தலைவர் ரெஜிஸ்குமார் தலைமையில், மாதர் சங்க மாவட்ட தலைவர் பரமேஸ்வரி, செயலாளர் ஞானசவுந்தரி, உதவி தலைவர் ராஜாத்தி ஆகியோர் முன்னிலையில் திரண்டனர். அப்போது அவர்கள் சிறுமியை பலாத்காரம் செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன கோ‌‌ஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அப்போது போலீசார், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்போவதாக கூறினர். இதற்காக போலீஸ் வேனும் வரவழைக்கப்பட்டது.

தர்ணா போராட்டம்

போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் திடீரென அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கு எதிராகவும், முதல்-அமைச்சரின் மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும், ஜனநாயக ரீதியாக போராட்டத்தில் ஈடுபட அனுமதி மறுக்கப்படுவதாகவும் கூறி கோ‌‌ஷங்களை எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதன் காரணமாக அவர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கலெக்டர் ஆறுதல்

இது குறித்து ஜனநாயக வாலிபர் சங்க மாநில தலைவர் ரெஜிஸ்குமார் கூறியதாவது:- சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 5 நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரை ஒருவரை கூட போலீசார் கைது செய்யாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம். இதேபோல் மாவட்ட கலெக்டர் ராமன் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு சென்று ஆறுதல் கூறி இருக்கலாம். இது அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பாக இருந்திருக்கும்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் கூறப்பட்டு உள்ள விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வில்லை. சிறுமியை பெண் காவலர்கள், சாதாரண சீருடையில் விசாரிக்க வேண்டும். அப்போது குழந்தையின் பெற்றோர் உடன் இருக்க வேண்டும் என்ற விதிமுறைக்கு மாறாக, சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிறுமி அனுமதிக்கப்பட்டு இருந்த போது ஆண் போலீசார் சீருடையில் வந்து விசாரணை நடத்தியுள்ளனர். இது போலீசாரின் அலட்சிய போக்கை காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story