நடத்தையில் சந்தேகப்பட்டு, மனைவியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை - ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


நடத்தையில் சந்தேகப்பட்டு, மனைவியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை - ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 27 Nov 2019 9:45 PM GMT (Updated: 27 Nov 2019 8:07 PM GMT)

நடத்தையில் சந்தேகம் அடைந்து மனைவியை கொலை செய்தவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன்கோவில் போக்குவரத்து நகரில் வசித்து வருபவர் ஜெயமணி (வயது 47). இவருடைய மனைவி இந்திரா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. ஜெயமணி தனது மனைவி இந்திராவின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அடிக்கடி வீட்டில் தகராறு செய்து அடித்து உதைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அதேபோல் கடந்த 9.1.2012 அன்று மனைவி இந்திராவிடம் செலவுக்கு பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரத்தில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து இந்திராவை குத்திக்கொலை செய்தார்.

இந்த கொலை தொடர்பாக ஜெயமணியின் 14 வயது மகன் அரவிந்தராஜ் அளித்த புகாரின்பேரில் கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயமணியை கைது செய்தனர்.

இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி பரிமளா, மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற ஜெயமணிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். 

Next Story