நெல்லை, தென்காசியில் தொடர் மழையால் 356 குளங்கள் நிரம்பின - விவசாய பணிகள் மும்முரம்


நெல்லை, தென்காசியில் தொடர் மழையால் 356 குளங்கள் நிரம்பின - விவசாய பணிகள் மும்முரம்
x
தினத்தந்தி 2 Dec 2019 10:00 PM GMT (Updated: 2 Dec 2019 5:10 PM GMT)

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த பலத்த மழையால் 356 குளங்கள் நிரம்பின. இதனால் விவசாய பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

நெல்லை, 

நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வருகின்றன. அணைகளில் 85 சதவீதத்திற்கு அதிகமாக தண்ணீர் உள்ளன. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நீர்வரத்து குளங்கள் என்று கூறப்படும் பாசன குளங்களில் பெரும்பாலான குளங்கள் நிரம்பி விட்டன.

நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி பாசனத்தில் மொத்தம் 441 குளங்கள் உள்ளன. இதில் 206 குளங்கள் முழுமையாக நிரம்பி மறுகால் பாய்கின்றன. 12 குளங்களில் 90 சதவீதமும், 65 குளங்களில் 75 சதவீதமும், 141 குளங்களில் 50 சதவீதமும், 16 குளங்களில் 25 சதவீதமும், ஒரு குளம் 20 சதவீதமும் நிரம்பி உள்ளன.

தென்காசி மாவட்டத்தில் சிற்றாறு வடிநில கோட்டம் ராமநதி அணை பாசனத்தில் உள்ள 33 குளங்களும், கருப்பாநதி அணை பாசனத்தில் உள்ள 72 குளங்கள் உள்பட சிற்றாறு வடிநில கோட்டத்தில் மொத்தம் 150 குளங்கள் மட்டுமே நிரம்பி உள்ளன. 500-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பாமல் உள்ளன. இதுதவிர 300-க்கும் மேற்பட்ட மானாவாரி குளங்கள் 50 சதவீதம் நிரம்பி உள்ளன. பழைய குற்றாலத்தில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் அதன் தண்ணீர் செல்லக்கூடிய பல குளங்கள் நிரம்பாமல் உள்ளன. இதற்கு சிற்றாறு வடிநில கோட்ட அதிகாரிகள் சரியான முறையில் கால்வாய்களை பராமரிக்காதது தான் காரணம் என்று அந்த பகுதி விவசாயிகள் கூறுகிறார்கள்.

நெல்லை, பாளையங்கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், கோடை மேழகியான் உள்ளிட்ட கால்வாய்கள் மூலம் 97 குளங்களும் நிரம்பி மறுகால் பாய்கின்றன. நயினார்குளம், தேனீர்குளம், அருகன்குளம், கட்டுடையார்குடியிருப்பு குளம், பால்கட்டளை குளங்கள் நிரம்பி மறுகால் பாய்கின்றன.

நெல்லை மாவட்டத்தில் தொடர் மழையால் பல இடங்களில் விவசாய பணிகள் நடந்து வருகின்றன. நெல்லை, பாளையங்கால்வாய், கோடகன் கால்வாய் பாசனப்பகுதிகளில் தற்போது நெல் நடவு செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. எனினும் விவசாயத்திற்கு தேவையான உரங்கள் கிடைக்கவில்லை என்றும், உரங்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன என்றும் விவசாயிகள் புகார் கூறுகிறார்கள்.

Next Story