சூளகிரி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியல்


சூளகிரி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 2 Dec 2019 11:00 PM GMT (Updated: 2 Dec 2019 7:48 PM GMT)

சூளகிரி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

ஓசூர்,

சூளகிரி அருகே உள்ள மருதாண்டபள்ளி ஊராட்சிக்குட்பட்டது ஜோகீர்பாளையம் கிராமம். இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டார் பழுதானதால் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் கிராம மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இது சம்பந்தமாக ஊராட்சி செயலாளரிடம் கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சாலைமறியல்

இந்தநிலையில் குடிநீர் கேட்டு நேற்று கிராம மக்கள் காலிக்குடங்களுடன் அப்பகுதியில் உள்ள சூளகிரி-பேரிகை சாலையில் திரண்டனர். பின்னர் அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் மற்றும் ஊராட்சி செயலாளர் அங்கு சென்று மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, இன்னும் ஓரிரு நாட்களில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு, சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலைமறியல் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story