மஞ்சம்பட்டி புனித சவேரியார் ஆலய திருவிழா கிராமமக்கள் ஒன்றுகூடி தயார் செய்த கறிவிருந்து


மஞ்சம்பட்டி புனித சவேரியார் ஆலய திருவிழா கிராமமக்கள் ஒன்றுகூடி தயார் செய்த கறிவிருந்து
x
தினத்தந்தி 3 Dec 2019 10:30 PM GMT (Updated: 3 Dec 2019 4:44 PM GMT)

மஞ்சம்பட்டி புனித சவேரியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற விருந்துக்காக கிராம மக்கள் ஒன்றுகூடி சமையல் செய்தனர். 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கறிவிருந்து வழங்கப்பட்டது.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டியில் புனித சவேரியார் ஆலயம் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடைபெறும். இதே போல் இந்த ஆண்டும் திருவிழாவின் தொடக்கமாக கடந்த ஞாயிறு, திங்கள் ஆகிய 2 நாட்கள் நவநாள் மன்றாட்டு நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து நேற்று காலை பலரும் ஆலயம் முன்பு பொங்கல் வைத்தனர். இதையடுத்து ஆட்டுக்கிடாய்கள் அழைத்து வரப்பட்டு அதன் பின்னர் பாடல் திருப்பலி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக சமபந்தி அன்னதானத்திற்கான உணவு தயார் செய்யும் பணிகள் தொடங்கியது.

கறிவிருந்து

வேண்டுதலுக்காக பலரும் ஆடுகள், கோழிகள் மற்றும் அரிசி, மளிகை பொருட்கள் என அனைத்தையும் கொண்டு வந்து ஆலய நிர்வாகிகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களிடம் ஒப்படைத்தனர். இதன் தொடர்ச்சியாக சுமார் 370-க்கும் மேற்பட்ட ஆடுகள், 100-க்கும் மேற்பட்ட கோழிகள் அறுக்கப்பட்டு கறிவிருந்து தயார் செய்யப்பட்டது.

இதே போல் கிராம மக்கள் அனைவரும் சமையல் பணிக்கான பல்வேறு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டனர். வெங்காயம், தக்காளி வெட்டுவது என தொடர் பணிகளில் நேற்று காலை முதல் மாலை வரை மும்முரம் காட்டினர். இதைத் தொடர்ந்து சுமார் 1600 கிலோ உணவு தயார் செய்யப்பட்டதுடன் மட்டன், சிக்கன் என கறிகளும் தனித் தனியாக தயார் செய்யப்பட்டு வைக்கப்பட்டது.

25 ஆயிரத்துக்கும்...

இதனால் நேற்று மஞ்சம்பட்டி முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்ததுடன் இளைஞர்கள் பலரும் தங்களுக்கான பணிகளில் முனைப்பு காட்டினர். இதே போல் சமையல் செய்வதற்கு தேவையான காய்கறிகளை தயார் செய்து கொடுக்கும் பணியில் நூற்றுக்கணக்கான பெண்களும் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து சிறப்பு வழிபாடுகளுக்குப்பின் அன்னதான நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது அனைவரும் கீழே அமர்ந்து சாதி, மத பேதமின்றி கறிவிருந்தை ருசித்தனர். இதில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் செய்திருந்தனர்.

Next Story