சிறுவனை அடித்துக்கொன்று குப்பைக்கிடங்கில் உடலை புதைத்த வழக்கு: அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் மகன் உள்பட 5 பேர் கைது


சிறுவனை அடித்துக்கொன்று குப்பைக்கிடங்கில் உடலை புதைத்த வழக்கு: அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் மகன் உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 11 Dec 2019 11:15 PM GMT (Updated: 11 Dec 2019 6:59 PM GMT)

திருச்சி அரியமங்கலத்தில் சிறுவனை அடித்துக்கொன்று குப்பை கிடங்கில் உடலை புதைத்த வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரின் மகன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

பொன்மலைப்பட்டி,

திருச்சி அரியமங்கலம் மேலஅம்பிகாபுரம் அண்ணாநகரைச் சேர்ந்தவர் அலியார். இவருடைய மகன் அப்துல்வாஹித் (வயது 12). 6-ம் வகுப்பு படித்து வந்த இவன் சமீபகாலமாக பள்ளிக்கு செல்லவில்லை. இந்தநிலையில் கடந்த 3-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுவன், பின்னர் வீடு திரும்பவில்லை.

பல்வேறு இடங்களில் தேடியும் அவன் கிடைக்காததால், சிறுவனின் தந்தை கடந்த 6-ந்ேததி அரியமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, சிறுவன் அப்துல் வாஹித், அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் கயல்விழி என்பவரின் முத்த மகன் முத்துக்குமார்(26) மற்றும் 18 வயது இளையமகன் ஆகியோருடன் சுற்றித்திரிந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் முத்துக்குமாரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், முத்துக்குமார் வளர்த்து வந்த பன்றிகளை அவருடைய பெரியப்பா மகன் பிடித்து விற்பனை செய்து வந்ததும், இதற்கு சிறுவன் அப்துல் வாஹித் உடந்தையாக இருந்ததும், அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், சிறுவன் அப்துல்வாஹித் வந்தால் அவனை பிடித்து கட்டி வைக்கும் படி, தனது நண்பர்கள் சரவணன்(19) மற்றும் 16 வயதுடைய 3 சிறுவர்களிடம் முத்துக்குமார் கூறியதும் தெரியவந்தது.

இந்தநிலையில், கடந்த 3-ந்் தேதி மாலை முத்துக்குமாரின் பன்றி பண்ணைக்கு சென்ற அப்துல்வாஹித்திடம் சரவணன் மற்றும் 3 சிறுவர்கள் சேர்ந்து பிரச்சினை செய்துள்ளனர். அப்போது, அவர்கள் அடித்ததில் சிறுவன் அப்துல்வாஹித் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளான். பின்னர் 4 பேரும் சேர்ந்து அவனுடைய உடலை, அரியமங்கலத்தில் உள்ள குப்பை கிடங்கில் உள்ள கழிவுநீர் தொட்டியில் போட்டு புதைத்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து குப்பைக்கிடங்கில் இருந்து, சிறுவன் அப்துல்வாஹித்தின் உடலை போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சிறுவன் மாயமான வழக்கை, கொலை வழக்காக போலீசார் மாற்றம் செய்தனர். பின்னர், இதுதொடர்பாக முத்துக்குமார், சரவணன் மற்றும் 3 சிறுவர்கள் என்று 5 பேரை கைது செய்தனர். இதில் முத்துக்குமாரின் தந்தை சேகர் பிரபல ரவுடியாக இருந்தவர் என்றும், இவர் முன்விரோதம் காரணமாக உறவினரால் கொலை செய்யப்பட்டதாகவும் போலீசார் கூறினார்கள்.


Next Story