கிரு‌‌ஷ்ணகிரியில் உள்ளாட்சி தேர்தல் குறித்து அனைத்து கட்சி கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது


கிரு‌‌ஷ்ணகிரியில் உள்ளாட்சி தேர்தல் குறித்து அனைத்து கட்சி கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 11 Dec 2019 10:30 PM GMT (Updated: 11 Dec 2019 8:27 PM GMT)

கிரு‌‌ஷ்ணகிரியில் உள்ளாட்சி தேர்தல் குறித்து அனைத்து கட்சி கூட்டம் கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது.

கிரு‌‌ஷ்ணகிரி,

மாவட்டத்தில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் 2 கட்டமாக நடக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இறுதி நாள் வருகிற 16-ந் தேதியாகும். 17-ந் தேதி வேட்புமனு ஆய்வு செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்ப பெற வருகிற 19-ந் தேதி கடைசி நாளாகும்.

2 கட்டமாக தேர்தல்

முதல் கட்ட தேர்தல் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. அதில், தளி, ஓசூர், காவேரிப்பட்டணம், மத்தூர் மற்றும் ஊத்தங்கரை ஆகிய ஒன்றியங்களில் உள்ள 1,530 ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கும், 112 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கும், 12 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கும், 170 ஊராட்சி தலைவர்களுக்கும் என மொத்தம் 1,824 பதவிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது.

2-ம் கட்டமாக வருகிற 30-ந் தேதி கிரு‌‌ஷ்ணகிரி, பர்கூர், வேப்பனப்பள்ளி, சூளகிரி, கெலமங்கலம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள 1,479 ஊராட்சி வார்டு, 109 ஊராட்சி ஒன்றிய வார்டு, 11 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கும், 163 ஊராட்சி தலைவர்களுக்கும் என மொத்தம் 1,762 பதவிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது.

4 விதமான வாக்குச்சீட்டு

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஒரே நேரத்தில் நடைபெறுவதால் 4 விதமான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும். இந்த தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவில் 1,046, 2-ம் கட்ட வாக்குப்பதிவில் 1,046 வாக்குச்சாவடிகளிலும் என மொத்தம் 2,092 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முதல் கட்ட தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 3 லட்சத்து 2 ஆயிரத்து 431 பேரும், பெண் வாக்காளர்கள் 2 லட்சத்து 93 ஆயிரத்து 269 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 59 பேரும் என 5 லட்சத்து 95 ஆயிரத்து 759 பேரும், 2-ம் கட்ட தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 3 லட்சத்து ஆயிரத்து 473 பேரும், பெண் வாக்காளர்கள் 2 லட்சத்து 95 ஆயிரத்து 31 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 62 பேரும் என மொத்தம் 5 லட்சத்து 96 ஆயிரத்து 566 பேரும் என மொத்தம் 11 லட்சத்து 92 ஆயிரத்து 325 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள்

மேலும், இந்த தேர்தலுக்காக 23 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 456 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 16 ஆயிரத்து 678 அலுவலர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சாதாரண நேரடி தேர்தல்கள் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளை கொண்டு மறைமுக தேர்தல்கள் வருகிற பிப்ரவரி மாதம் 11-ந் தேதி நடைபெறும். அதன்படி, ஒரு மாவட்ட ஊராட்சி தலைவர், 1 மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், 10 ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், 10 ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர்கள், 333 கிராம ஊராட்சி துணைத் தலைவர்கள் என மொத்தம் 355 பதவிக்கான தேர்தல் நடத்தப்படும். உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார் தெரிவிக்க 04343-233333 என்ற தொலைபேசி எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) கமலகண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (தேர்தல்) முருகன், சண்முகம், தேர்தல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், அரசியல் கட்சி பிரமுகர்கள் காத்தவராயன், கிரு‌‌ஷ்ணன், சந்திரமோகன் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

Next Story