நாயை கொன்று மூதாட்டியிடம் கவரிங் நகைகள் பறிப்பு கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு


நாயை கொன்று மூதாட்டியிடம் கவரிங் நகைகள் பறிப்பு கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 12 Dec 2019 10:15 PM GMT (Updated: 12 Dec 2019 3:14 PM GMT)

வி.கைகாட்டி அருகே நாயை கொன்று மூதாட்டியிடம் கவரிங் நகைகளை பறித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வி.கைகாட்டி,

அரியலூர் மாவட்டம், பெரியநாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் பாப்பா(வயது 65). இவர் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் எதிரில் பெட்டிக்கடை மற்றும் டீக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவரது மகன் வெளியூரில் வேலைபார்த்து வரும் நிலையில், மூதாட்டிக்கு துணையாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை டீக்கடைக்கு வந்த மர்மநபர்கள் 2 பேர் மூதாட்டியிடம் டீ கேட்டு வாங்கி அருந்தியுள்ளனர். பின்னர் திடீரென மூதாட்டியை தாக்கி அவர் அணிந்திருந்த நகைகளை பறிக்க முயன்றனர். இதனை பார்த்து குரைத்த நாயை கொன்றுவீசிவிட்டு, மூதாட்டி கையில் அணிந்திருந்த வளையல்கள் மற்றும் கழுத்தில் இருந்த செயின் ஆகியவற்றை பறித்துக்கொண்டு கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

வளையல்களை பறித்தபோது மூதாட்டி பாப்பாவின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மயக்கநிலையில் இருந்த மூதாட்டி பாப்பாவை காலையில் டீக்குடிக்க கடைக்கு வந்த கிராமத்தினர் அவரை காப்பாற்றி ஆறுதல் கூறினர். இந்நிலையில் கிராமத்தினரிடம் மூதாட்டி, தான்அணிந்திருந்த நகைகள் அனைத்தும் கவரிங் என்றும், கொள்ளையர்களுக்கு அது தெரியாமல் தன்னை தாக்கி, நாயை கொன்று, கவரிங் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளதாக கூறியுள்ளார். இதனையடுத்து அப்பகுதி மக்கள் இதுகுறித்து கயர்லாபாத் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கயர்லாபாத் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story