உள்ளாட்சி தேர்தலில் பதற்றமான 378 வாக்குச்சாவடிகளை கண்காணிக்க சிறப்பு ஏற்பாடு - கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி


உள்ளாட்சி தேர்தலில் பதற்றமான 378 வாக்குச்சாவடிகளை கண்காணிக்க சிறப்பு ஏற்பாடு - கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி
x
தினத்தந்தி 13 Dec 2019 10:30 PM GMT (Updated: 13 Dec 2019 5:48 PM GMT)

உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் பதற்றமான 378 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை கண்காணிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக, கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

கோவில்பட்டி, 

தமிழகத்தில் 9 மாவட்டங்கள் நீங்கலாக, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, பஞ்சாயத்து தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிடுகிறவர்கள், அந்தந்த யூனியன் அலுவலகங்களிலும், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறவர்கள் அந்தந்த பஞ்சாயத்து அலுவலகங்களிலும் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் இடத்தில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று ஆய்வு நடத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 3 ஆயிரத்து 537 பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர். பஞ்சாயத்து வார்டு உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய 4 பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்படுகிறது. மாவட்டத்தில் 7 யூனியன்களுக்கு முதல் கட்டமாகவும், மற்ற 5 யூனியன்களுக்கு 2-வது கட்டமாகவும் தேர்தல் நடைபெறுகிறது.

2 கட்ட தேர்தலில் மொத்தம் 14 ஆயிரத்து 500 தேர்தல் பணியாளர்கள் பணியாற்றுவார்கள். இவர்களுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 21-ந்தேதி ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படுகிறது. தேர்தல் தினத்துக்கு முந்தின நாள் 3-ம் கட்ட பயிற்சி அளிக்கப்படும். பின்னர் அவர்களுக்கு வாக்குச்சாவடி ஒதுக்கப்பட்டு, தேர்தல் நடத்துவதற்கான பொருட்களும் வழங்கப்படும்.

மாவட்டத்தில் இதுவரையிலும் 1,363 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்றும் (சனிக்கிழமை) வேட்புமனுக்கள் பெறப்படும். நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் ஆகும். அதன் பின்னர் வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, வருகிற 19-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். 15 முதல் 20 வாக்குச்சாவடிகளுக்கு ஒரு மண்டல தேர்தல் அலுவலர் வீதம் நியமிக்கப்படுவர்.

மாவட்டத்தில் 378 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு உள்ளன. அங்கு வாக்குப்பதிவை கண்காணிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி அங்கு வெப்-கேமரா, சி.சி.டி.வி. கேமரா பொருத்தவும், வாக்குப்பதிவு முழுவதையும் வீடியோ மூலம் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்படும். மேலும் அங்கு தேர்தல் நுண் பார்வையாளரும் நியமிக்கப்படுவார்.

மாவட்டத்தில் 12 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சென்று, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்படும். மாவட்டத்தில் பஞ்சாயத்து தலைவர் பதவியை ஏலம் விடுவது தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை. அப்படி ஏதேனும் புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story