குடும்பத்துடன் தற்கொலை செய்த மருந்து வியாபாரி கடிதம் எழுதி வைத்திருந்தாரா? வீட்டில் போலீசார் சோதனை


குடும்பத்துடன் தற்கொலை செய்த மருந்து வியாபாரி கடிதம் எழுதி வைத்திருந்தாரா? வீட்டில் போலீசார் சோதனை
x
தினத்தந்தி 14 Dec 2019 11:15 PM GMT (Updated: 14 Dec 2019 5:12 PM GMT)

குடும்பத்துடன் தற்கொலை செய்த திருச்சி மருந்து வியாபாரி கடிதம் எழுதி வைத்திருந்தாரா? என அவரது வீட்டில் ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர்.

திருச்சி,

திருச்சி உறையூர் காவேரி நகர் 4-வது குறுக்குத்தெருவில் வசித்து வந்தவர் உத்திராபதி (வயது 50). இவர் மருத்துவ ஊசி மற்றும் மருந்துகள் உள்ளிட்டவை விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வந்தார். உத்திராபதி தனது மனைவி சங்கீதா (43), மகள் அபிநயஸ்ரீ (15), மகன் ஆகாஷ் (12) ஆகியோருடன் கடந்த 11-ந் தேதி கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றார்.

பின்னர் கடந்த 12-ந் தேதி இரவு அவர் திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு ரெயில் நிலையத்திற்கு வந்தார். அங்கு உத்திராபதி குடும்பத்துடன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. திருச்சியில் நடத்தி வந்த மருந்து விற்பனை தொழில் நஷ்டமடைந்ததால் உத்திராபதி குடும்பத்துடன் தற்கொலை செய்தது கொடைரோடு ரெயில்வே போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதற்கிடையில் 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கொடைரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் உத்திராபதி தற்கொலை செய்வதற்கு முன்பு தனது வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு கொடைக்கானலுக்கு வந்திருக்கலாம் அல்லது தற்கொலைக்கான காரணத்தை குறிப்பிட்டு அதற்கான அடையாளத்தை வீட்டில் வைத்திருக்கலாம் என ரெயில்வே போலீசார் கருதினர். இதையடுத்து திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் கொடைரோடு ரெயில்வே போலீசார் நேற்று திருச்சி வந்தனர். பின்னர் உறையூர் காவேரி நகரில் பூட்டியிருந்த அவரது வீட்டின் கதவை உறவினர்கள் முன்னிலையில் போலீசார் திறந்தனர். மேலும் வீட்டின் உள்ளே சென்று போலீசார் பார்வையிட்டனர்.

வீட்டில் இருந்த ஒவ்வொரு அறைகளையும் போலீசார் சோதனையிட்டனர். இதில் கடிதம் எழுதி வைத்திருக்கிறாரா? என பார்வையிட்டனர். அக்கம்பக்கத்திலும் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த சோதனை குறித்து ரெயில்வே போலீசார் கூறுகையில், ‘உத்திராபதியின் வீட்டில் எந்த கடிதமும் சிக்கவில்லை. அவர் இந்த துயர முடிவை ஏன் எடுத்தார்? என்பதே தெரியவில்லை. தொழிலில் நஷ்டமானதால் தான் குடும்பத்துடன் தற்கொலை செய்திருக்க வாய்ப்பு உள்ளது. அவருக்கு கடன் அதிகமாகி அதனால் தொல்லை இருந்ததா? என்பது புலன் விசாரணையில் தான் தெரியவரும்’ என்றனர்.

Next Story