சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தொடங்கி வைத்தார்


சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 23 Jan 2020 10:30 PM GMT (Updated: 23 Jan 2020 7:25 PM GMT)

நாகை மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் கடந்த 20-ந்தேதி முதல் வருகிற 27-ந்தேதி வரை சாலை பாதுகாப்பு வார விழா போக்குவரத்துத்துறை சார்பில் நடைபெற்று வருகிறது. அதன் படி நாகையில் சாலை பாதுகாப்பு வாரவிழாயையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் ஓட்டுனர் பயிற்சி பள்ளியை சார்ந்தவர்கள், வட்டார போக்குவரத்து துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு சாலை விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர். முன்னதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம், நாகை மண்டலம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சியை அமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார். இதில் நாகை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் தங்ககதிரவன், வருவாய் கோட்டாட்சியர் பழனி குமார், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அறிவழகன், அழகிரிசாமி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்(நாகை மண்டலம்) பொது மேலாளர் மாரியப்பன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், நகராட்சி ஆணையர் ஏகராஜ், நாகை தாசில்தார் பிரான்சிஸ் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கீழ்வேளூர்

இதேபோல் கீழ்வேளூரில் காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கீழ்வேளூர் அரசு மருத்துவமனை டாக்டர் வித்யா, கீழ்வேளூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் ஆகியோர் தலைமை தாங்கினர். முகாமில் கார், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்தும், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும் எடுத்து கூறப்பட்டது. இதில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

வேளாங்கண்ணி

வேளாங்கண்ணி காவல் துறை சார்பில் வேளாங்கண்ணி பஸ் நிலையத்தில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்துக்கு வேளாங்கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் தலைக்கவசம் அணிய வேண்டும், சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இதில் வேளாங்கண்ணி போலீசார் மற்றும் கார், வேன், ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.

Next Story