காலியாக உள்ள ஒரு இடத்திற்கான கர்நாடக மேல்-சபை இடைத்தேர்தல் வருகிற 17-ந் தேதி நடக்கிறது தேர்தல் ஆணையம் அறிவிப்பு


காலியாக உள்ள ஒரு இடத்திற்கான கர்நாடக மேல்-சபை இடைத்தேர்தல் வருகிற 17-ந் தேதி நடக்கிறது தேர்தல் ஆணையம் அறிவிப்பு
x
தினத்தந்தி 27 Jan 2020 11:49 PM GMT (Updated: 27 Jan 2020 11:49 PM GMT)

கர்நாடக மேல்-சபையில் ஒரு இடம் காலியாக உள்ளது. அந்த இடத்திற்கான இடைத்தேர்தல் வருகிற 17-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மேல்-சபை உறுப்பினராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரிஸ்வான் ஹர்ஷத். அவர் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டசபை இடைத்ேதர்தலில் காங்கிரஸ் சார்பில் சிவாஜிநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். இதையடுத்து அவர் தனது எம்.எல்.சி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் கர்நாடக மேல்-சபையில் ஒரு இடம் காலியாக இருக்கிறது.

இந்த நிலையில் மேல்-சபையில் காலியாக உள்ள அந்த ஒரு இடத்திற்கு அடுத்த மாதம்(பிப்ரவரி) 17-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. மனுக்களை தாக்கல் செய்ய பிப்ரவரி 6-ந் தேதி கடைசி நாள் ஆகும். 7-ந் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது.

மனுக்களை வாபஸ் பெற 10-ந் தேதி கடைசி நாள் ஆகும். போட்டி இருந்தால், 17-ந் தேதி காலை 9 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மதியம் 4 மணி வரை நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாலையே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். இந்த இடைத்தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப்போட தகுதி படைத்தவர்கள். இதில் தேர்ந்தெடுக்கப்படும் எம்.எல்.சி.யின் பதவிக்காலம் வருகிற 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி வரை இருக்கும்.

கர்நாடக சட்டசபையில் உள்ள உறுப்பினர்களின் பலத்தின் அடிப்படையில் பா.ஜனதாவுக்கு முழு பெரும்பான்மை உள்ளது. அக்கட்சி சார்பில் துணை முதல்- மந்திரி லட்சுமண் சவதி போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தாது என்று கூறப்படுகிறது.

Next Story