வீடுகளை அகற்ற எதிர்ப்பு திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை


வீடுகளை அகற்ற எதிர்ப்பு திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 28 Jan 2020 10:45 PM GMT (Updated: 28 Jan 2020 7:23 PM GMT)

வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் திரளானோர் நேற்று தங்கள் குடும்பத்தாருடன் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

நாங்கள் அனைவரும் அதிகத்தூர் கிராமம் நரிக்குறவர் காலனி பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். எங்களுக்கு பட்டா வழங்கப்பட வில்லை. இதனால் நாங்கள் மின்சார வசதி, சாலை வசதி, தொகுப்பு வீடுகள் போன்றவற்றை பெற முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம்.

இதைத்தொடர்ந்து கடந்த மாதம் வருவாய்துறை அதிகாரிகள் எங்கள் பகுதிக்கு வந்து எங்களுக்கு பட்டா வழங்க விவரங்களை எழுதி கணக்கெடுத்து சென்றனர். இந்த நிலையில் கடந்த 26-ந் தேதியன்று குடியரசு தினத்தையொட்டி அதிகத்தூர் கிராமத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எங்கள் பகுதியில் உள்ள வீடுகளை அகற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை அறிந்த நாங்கள் அனைவரும் மிகவும் மன வேதனை அடைந்தோம்.

10 ஆண்டுகளாக அங்கு வசித்து வரும் எங்கள் வீடுகளை அகற்ற தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுத்து எங்கள் வீடுகளை அகற்ற கூடாது. எங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர் அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி நீலவானத்து நிலவன், மாவட்ட நிர்வாகி புருஷோத்தமன் ஆகியோருடன் சென்று இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

பின்னர் அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story