எவர்சில்வர் பாத்திர தொழிலாளர்களுக்கான 2-ம் கட்ட சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி


எவர்சில்வர் பாத்திர தொழிலாளர்களுக்கான 2-ம் கட்ட சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி
x
தினத்தந்தி 3 Feb 2020 11:00 PM GMT (Updated: 3 Feb 2020 10:35 PM GMT)

எவர்சில்வர் பாத்திர தொழிலாளர்களுக்கான 2-ம் கட்ட சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் அனுப்பர்பாளையம் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 300-க்கும் மேற்பட்ட பாத்திர உற்பத்தி பட்டறைகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அந்த தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

கடந்த 2016-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சம்பள ஒப்பந்தம் கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்ததை தொடர்ந்து, சம்பள உயர்வு வழங்குமாறு உற்பத்தியாளர் சங்கத்தை கேட்பது என்று தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதன்படி கடந்த 13-ந்தேதி உற்பத்தியாளர் சங்கத்திற்கு இதுதொடர்பான கடிதம் அனுப்பி வைக்கப் பட்டது.

மேலும் எவர்சில்வர் பாத்திர தொழிலாளர்களுக்கு 50 சதவீதமும், பித்தளை, செம்பு மற்றும் வார்ப்பு பாத்திர தொழிலாளர்களுக்கு 60 சதவீதமும், ஈயப்பூச்சு பாத்திர தொழிலாளர்களுக்கு 70 சதவீதம் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று பாத்திர உற்பத்தியாளர் சங்கங்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் 27-ந்தேதி எவர்சில்வர் பாத்திர தொழிலாளர்களுக்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உற்பத்தியாளர்கள் தரப்பில் 4 சதவீதம் மட்டுமே உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

பேச்சுவார்த்தை தோல்வி

இந்த நிலையில் இருதரப்பினருக்கும் இடையிலான 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கங்கள் சார்பில் ரங்கராஜ், குப்புசாமி (சி.ஐ.டி.யு), தேவராஜ், பாலசுப்பிரமணியம் (ஏ.டி.பி), செல்வராஜ், நாகராஜ் (ஏ.ஐ.டி.யு.சி), வேலுச்சாமி, தர்மலிங்கம் (எல்.பி.எப்.), திருஞானம், பாண்டியராஜ் (எச்.எம்.எஸ்), ஈஸ்வரன், அசோக் (ஐ.என்.டி.யு.சி), முத்துக்கிருஷ்ணன், அர்ச்சுனன் (காமாட்சியம்மன் சங்க நிர்வாகிகள்), சீனிவாசன், லட்சுமி நாராயணன் (பி.எம்.எஸ்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

எவர்சில்வர் முழுக்கூலி பாத்திர உற்பத்தியாளர் சங்கம் சார்பில் நிர்வாகிகள் கதிரேசன், ராயப்பன், குமாரசாமி, ராஜேந்திரன், துரைசாமி ஆகியோர் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையில் பாத்திர உற்பத்தியாளர்கள் தரப்பில் ஏற்கனவே தருவதாக கூறப்பட்ட 4 சதவீதத்துடன் கூடுதலாக 1 சதவீதம் சேர்த்து 5 சதவீதம் சம்பள உயர்வு தருவதாக தெரிவிக்கப்பட்டது. இதை தொழிற்சங்க நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ளாததால் நேற்று நடைபெற்ற 2-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில் பித்தளை பாத்திர உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளுடனான 2-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று (செவ்வாய்க்கிழமை) நடை பெறுகிறது. 

Next Story