மன்னார்குடியில், பெண்ணிடம் நகை திருடிய 2 பேர் கைது - 7 பவுன் மீட்பு


மன்னார்குடியில், பெண்ணிடம் நகை திருடிய 2 பேர் கைது - 7 பவுன் மீட்பு
x
தினத்தந்தி 5 Feb 2020 7:30 AM GMT (Updated: 5 Feb 2020 7:16 AM GMT)

மன்னார்குடியில் பெண்ணிடம் நகை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 7 பவுன் நகையை மீட்டனர்.

மன்னார்குடி, 

மன்னார்குடியை சேர்ந்தவர் அனுசுயா (வயது22). இவர் கடந்த மாதம் 12-ந்தேதி தனது உறவினர் திருமண விழாவிற்கு தஞ்சாவூருக்கு வந்தார். பின்னர் மீண்டும் பஸ்சில் ஏறி மன்னார்குடிக்கு வந்தார். அதனை தொடர்ந்து மன்னார்குடி பஸ் நிலையத்தில் இறங்கினார். அப்போது கையில் வைத்திருந்த நகை பையை காணவில்லை. இதுகுறித்து அனுசுயா மன்னார்குடி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு நீடாமங்கலம் பகுதியில் ஒரு சங்கிலி பறிப்பு வழக்கில் மயிலாடுதுறையை சேர்ந்த ராம்கி(26), விக்னே‌‌ஷ்(24) ஆகிய 2 பேரை நீடாமங்கலம் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து மன்னார்குடி போலீசார் திருச்சி மத்திய சிறைக்கு சென்று ராம்கி, விக்னே‌‌ஷ் ஆகிய 2 பேரை மன்னார்குடிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அனுசுயாவிடம் இருந்து 7 பவுன் நகையை திருடி சென்றதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து 7 பவுன் நகையை மீட்டனர். இதனையடுத்து மன்னார்குடி போலீசார் 2 பேரை கைது செய்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.

Next Story