திருவாரூரில் இருந்து கடலூருக்கு மின்சார ரெயில் சோதனை ஓட்டம் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு


திருவாரூரில் இருந்து கடலூருக்கு மின்சார ரெயில் சோதனை ஓட்டம் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு
x
தினத்தந்தி 8 Feb 2020 11:00 PM GMT (Updated: 8 Feb 2020 5:51 PM GMT)

திருவாரூரில் இருந்து கடலூருக்கு மின்சார ரெயில் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. இந்த சோதனை ஓட்டத்தை ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் ஆய்வு செய்தார்.

திருவாரூர்,

விழுப்புரத்தில் இருந்து கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக திருவாரூர் வரை மின்சார ரெயில் இயக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டது. இதற்கான பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. தற்போது கடலூரில் இருந்து திருவாரூர் வரையில் 113 கிலோ மீட்டர் தூரத்திற்கு மின்பாதை அமைக்கும் பணிகள் நிறைவு அடைந்தது. கடந்த மாதம் 25-ந்தேதி மின்சார ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

இதையடுத்து இந்த பாதையில் ரெயில் இயக்குவதற்காக பாதுகாப்பு தன்மை குறித்து ரெயில்வே பாதுகாப்பு ஆணையம் மூலமாக ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் கடலூரில் மின்சார ரெயிலுக்காக துணை மின் நிலையம் பயன்பாட்டிற்கு வந்தது. இதனையடுத்து கடலூரில் இருந்து திருவாரூர் வரை மின்சார ரெயில் இயக்குவதற்கான மின்பாதையை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.

ஆய்வு

அதற்காக கடலூரில் இருந்து டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட சிறப்பு ரெயிலில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் புறப்பட்டு நேற்று மதியம் 2 மணியளவில் திருவாரூர் வந்தார். அப்போது வரும் வழியில் உள்ள ரெயில் நிலையங்கள், மின்பாதைகளை ஆய்வு செய்தார். திருவாரூர் ரெயில் நிலையத்தில் தயாராக இருந்த மின்சார ரெயில் என்ஜின் சிறப்பு ரெயிலில் இணைக்கப்பட்டு, மின்பாதையில் இணைப்பு கொடுக்கப்பட்டது.

பின்னர் ரெயில் என்ஜின் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பூசணி, தேங்காய் உடைக்கப்பட்டது. சரியாக 3.55 மணிக்கு பச்சை கொடி அசைக்கப்பட்டு திருவாரூரிலிருந்து சிறப்பு மின்சார ரெயில் புறப்பட்டது. ரெயில் என்ஜினையடுத்து கண்ணாடி கூண்டு வடிவமைப்பில் அமைக்கப்பட்டிருந்த முதல் பெட்டியில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் திருவாரூரில் இருந்து கடலூர் வரையிலான மின்பாதையை ஆய்வு செய்தார். அத்துடன் பயணிகள் பாதுகாப்பு தன்மையை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த சோதனை ரெயில் சுமார் 90 முதல் 100 கிலோ மீட்டர் வரை வேகத்தில் இயக்கப்பட்டதாக தெரிகிறது. ஆய்வின்போது ரெயில்வே கோட்ட மேலாளர் அஜய்குமார் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story