நடத்தை சந்தேகத்தால் விபரீதம் சிலிண்டரால் தாக்கி பெண் கொலை கணவர் கைது


நடத்தை சந்தேகத்தால் விபரீதம் சிலிண்டரால் தாக்கி பெண் கொலை கணவர் கைது
x
தினத்தந்தி 15 Feb 2020 10:30 PM GMT (Updated: 15 Feb 2020 8:25 PM GMT)

நடத்தையில் சந்தேகப் பட்டு மனைவியை சிலிண்டரால் தாக்கி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பை காட்கோபர் மேற்கு, பட்வாடி பகுதி நலந்தாசேவா குடிசைப்பகுதியில் வசித்து வந்தவர் அஞ்சனா (வயது 35). இவரது கணவர் பிரதீப் (40). இவர்களுக்கு 18 மற்றும் 13 வயதில் 2 மகன்கள் உள்ளனர். பிரதீப், மதுவுக்கு அடிமையாக இருந்தார். அஞ்சனா வீட்டு வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இந்தநிலையில் பிரதீப்புக்கு மனைவி அஞ்சனாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவர், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

கணவரின் தொல்லை தாங்க முடியாமல் கடந்த சில நாட்களுக்கு முன் அஞ்சனா கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றார். இந்தநிலையில் மகன்களின் எதிர்காலம் கருதி கடந்த வியாழக்கிழமை மீண்டும் காட்கோபர் வந்தார். அப்போது கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த பிரதீப், மனைவி அஞ்சனா இரவில் தூங்கி கொண்டு இருந்த போது வீட்டில் இருந்த காலி கியாஸ் சிலிண்டரை எடுத்து அவரது தலையில் தாக்கினார்.

சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த மகன்கள் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் கிடந்த அஞ்சனாவை மீட்டு காட்கோபர் ராஜவாடி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அஞ்சனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்தநிலையில் மனைவியை கொலை செய்த பிரதீப் காட்கோபர் போலீஸ் நிலையம் சென்று சரணடைந் தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மனைவியை சிலிண்டரால் தாக்கி கொலை செய்த பிரதீப்பை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story